‘அதிக ரன் குவித்தாலும் எதிரணிக்கு மதிப்பளிக்க வேண்டியது முக்கியமானதாகும்’; சென்னை அணியின் கேப்டன் டோனி அறிவுரை


‘அதிக ரன் குவித்தாலும் எதிரணிக்கு மதிப்பளிக்க வேண்டியது முக்கியமானதாகும்’; சென்னை அணியின் கேப்டன் டோனி அறிவுரை
x
தினத்தந்தி 22 April 2021 9:58 PM GMT (Updated: 22 April 2021 9:58 PM GMT)

அதிக ரன் குவித்தாலும் எதிரணிக்கு மதிப்பளிக்க வேண்டியது முக்கியமானதாகும் என்று சென்னை அணியின் கேப்டன் டோனி தெரிவித்தார்.

சென்னை அணி வெற்றி

14-வது ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 18 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை ருசித்தது. முதலில் ஆடிய சென்னை அணி ருதுராஜ் கெய்க்வாட் (64 ரன்), பாப் டுபிளிஸ்சிஸ் (ஆட்டம் இழக்காமல் 95 ரன்) ஆகியோரின் அரைசதத்தால் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 31 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் (40 ரன்), ஆந்த்ரே ரஸ்செல் (54 ரன்), கம்மின்ஸ் (ஆட்டம் இழக்காமல் 66 ரன்) உள்ளிட்டோரின் ருத்ரதாண்டவத்தால் கடைசி கட்டத்தில் மிரள வைத்த அந்த அணி வெற்றியை நெருங்கி வந்து நழுவ விட்டது. கொல்கத்தா 19.1 ஓவர்களில் 202 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இந்த ஆட்டத்தில் முதல் 5 விக்கெட்டுகள் வீழ்ந்த பிறகு கொல்கத்தா அணி 171 ரன்கள் திரட்டி பிரமிக்க வைத்தது. இதற்கு முன்பு 2016-ம் ஆண்டில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்த பிறகு 130 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது. அச்சாதனையை கொல்கத்தா அணி தகர்த்தது. சென்னை அணி வீரர் பிளிஸ்சிஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த போட்டியில் பந்து வீசுகையில் கொல்கத்தா அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் அந்த அணியின் கேப்டன் இயான் மோர்கனுக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக ஐ.பி.எல். நிர்வாகம் விதித்துள்ளது.

டோனி கருத்து

வெற்றிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி கூறுகையில், ‘இது போன்ற ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் கேப்டனின் பணி எளிதானது. ஏனெனில் 15-வது ஓவரில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான போட்டியாக இந்த ஆட்டம் இருந்தது. அதாவது நீயா? நானா? என்ற போட்டியாக அமைந்தது. இந்த மோதலில் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய அணி வெற்றி பெற்றது. 20-வது ஓவரின் இறுதி வரை சென்று இருந்தால் போட்டி இன்னும் நெருக்கமாக வந்திருக்கும். இதே போல் அவர்கள் கைவசம் விக்கெட் இருந்திருந்தாலும் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்.

தாழ்மையுடன் இருக்க வேண்டியதும், எதிரணிக்கு மரியாதை அளிக்க வேண்டியதும் எப்போதும் முக்கியமானதாகும். எல்லா ஐ.பி.எல். அணியிலும் அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். நம்மால் நிறைய ரன் எடுக்க முடிகிறது என்றால் அவர்களாலும் ஏன் முடியாது?

நாம் கணிசமான ரன்கள் எடுத்து விட்டோம். இருப்பினும் பந்தா இல்லாமல் பணிவுடன் நன்றாக செயல்பட வேண்டியது அவசியமானது என்று வீரர்களிடம் அறிவுறுத்தினேன். பந்து நின்று வந்ததுடன் சுழன்றதால் ஆந்த்ரே ரஸ்செலுக்கு எதிராக பந்து வீச ரவீந்திர ஜடேஜா மட்டுமே ஒரே வாய்ப்பாக இருந்தார். எங்களது பேட்டிங் அருமையாக இருந்தது. ருதுராஜ் கடந்த ஐ.பி.எல். போல் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்’ என்றார்.

பிளமிங் பேட்டி

டோனியின் பெற்றோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கிடம் கேட்ட போது, ‘டோனியின் குடும்ப சூழ்நிலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்துக்கு நன்கு தெரியும். டோனியின் குடும்பத்தினருக்கு தேவைப்படும் உதவிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. டோனியிடம் பேசினோம். தற்போது அவருடைய பெற்றோரின் உடல்நிலை கட்டுக்குள் இருக்கிறது. இருப்பினும் அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களுக்கு தேவையான ஆதரவை அளிக்க வேண்டியது எங்களது கடமையாகும். டோனியின் குடும்பத்தினர் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story