ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா கொரோனாவால் பாதிப்பு


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற விருத்திமான் சஹா, அமித் மிஸ்ரா கொரோனாவால் பாதிப்பு
x
தினத்தந்தி 4 May 2021 10:24 PM GMT (Updated: 4 May 2021 10:24 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற ஐதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் சென்னை, மும்பை, ஆமதாபாத், டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் சென்னை, மும்பையில் தொடக்க லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்து ஆமதாபாத், டெல்லியில் போட்டிகள் நடந்தது. கடந்த 24 நாட்களில் மொத்தம் 29 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்த போட்டி வருகிற மே 30-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையில் ஐ.பி.எல். போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகிக்கும் தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனை முடிவில் நேற்று முன்தினம் உறுதியானது. இதனால் அன்றைய தினம் இரவு ஆமதாபாத்தில் நடக்க இருந்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் மறுதேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

சஹா, அமித் மிஸ்ரா, ஹஸ்சி பாதிப்பு

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் எல்.பாலாஜி மற்றும் அந்த அணியின் பஸ் கிளீனர் ஒருவரும் கொரோனாவில் சிக்கினர். இதனால் டெல்லியில் இன்று நடக்க இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தை தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது. அத்துடன் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தின் மைதான ஊழியர்கள் 5 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால் ஐ.பி.எல். போட்டி தொடர்ந்து அரங்கேறுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இந்த நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவது மேலும் அதிகரித்தது. ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் விருத்திமான் சஹா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதியானது. இதனை அடுத்து அந்த இரு அணியின் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதனால் டெல்லியில் நேற்று இரவு நடக்க இருந்த ஐதராபாத் சன்ரைசர்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹஸ்சியும் (ஆஸ்திரேலியா) கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது.

வெளிநாட்டு வீரர்கள் அச்சம்

மேலும் மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறி கொரோனா தொற்று தாக்கியதால் வீரர்கள் மட்டுமின்றி போட்டி அமைப்பாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எப்படி கொரோனா பரவியது என்பது தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். பல வெளிநாட்டு வீரர்கள் அச்சம் காரணமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு தாங்கள் சார்ந்த அணி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து அணி நிர்வாகிகள் ஐ.பி.எல். நிர்வாகத்தை தற்போதைய சூழலில் போட்டியை தொடருவது உகந்ததாக இருக்காது என்று வற்புறுத்தினர்.

கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களில் 4 அணியினருக்கு தொற்றியதை அடுத்து மேலும் பல வீரர்களுக்கு பரவினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால் ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை நடத்தி இந்த சீசனுக்கான ஐ.பி.எல். தொடர் உடனடியாக காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக நேற்று அறிவித்தனர். ஆனால் இந்த போட்டி தொடர் மீண்டும் எப்பொழுது தொடங்கி நடைபெறும் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஐ.பி.எல். போட்டியில் இருந்து வீடு திரும்பும் இந்திய வீரர்கள் சில நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.


Next Story