ஐ.பி.எல். போட்டிக்கான மருத்துவ உயிர் பாதுகாப்பு வளைய கட்டுப்பாடுகளை மூத்த இந்திய வீரர்கள் விரும்பவில்லை - மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் புகார்


ஐ.பி.எல். போட்டிக்கான மருத்துவ உயிர் பாதுகாப்பு வளைய கட்டுப்பாடுகளை மூத்த இந்திய வீரர்கள் விரும்பவில்லை - மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் புகார்
x
தினத்தந்தி 11 May 2021 9:37 PM GMT (Updated: 11 May 2021 9:37 PM GMT)

ஐ.பி.எல். போட்டிக்கான மருத்துவ உயிர் பாதுகாப்பு வளைய கட்டுப்பாடுகளை மூத்த இந்திய வீரர்கள் விரும்பவில்லை என மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதால் ஐ.பி.எல். போட்டித் தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக கடந்த 4-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் பங்கேற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பம்மென்ட் மற்றும் நியூசிலாந்து வீரர்கள் சில தினங்களுக்கு முன்பு தங்கள் நாட்டுக்கு பத்திரமாக திரும்பினார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தை சேர்ந்த பீல்டிங் பயிற்சியாளர் ஜேம்ஸ் பம்மென்ட் அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். போட்டியில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளைய (பயோ பபுள்) கட்டுப்பாடுகளை சில மூத்த இந்திய வீரர்கள் விரும்பியது போல் தெரியவில்லை. என்ன மாதிரி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை சொன்னால் அதனை கடைப்பிடிப்பதில் தயக்கம் காட்டினார்கள். ஐ.பி.எல். போட்டிக்கான ‘பயோ பபுள்’ பாதுகாப்பானதாகவே இருந்தது. 

ஆனால் பயணங்கள் எப்போதும் சவாலாக இருக்கும் என்று தான் நினைத்தோம். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு தொடங்கியதும் எல்லா அணியின் வீரர்களிடமும் ஒரு வித அச்சமும், பயமும் நிலவியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு என்று கேள்விப்பட்டதும் எங்கள் (மும்பை) அணியின் வீரர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டது. 

ஏனெனில் நாங்கள் தான் கடைசியாக அவர்களுடன் விளையாடி இருந்தோம். நான் அதிக நேரத்தை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்களுடன் தான் செலவிட்டேன். அவர்களின் மனநிலையும் மாறி இருந்ததை அறிய முடிந்தது. குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வந்தாலும் இந்திய வீரர்கள் இந்த போட்டியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்ததை பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. ஐ.பி.எல். போட்டியை 6 நகரங்களில் நடத்த எடுத்த முடிவுக்கு பதிலாக மும்பையில் மட்டும் நடத்த நடவடிக்கை எடுத்து இருந்தால் போட்டியை எளிதாக நிர்வகித்து இருக்கலாம்’ என்று தெரிவித்தார்.

Next Story