டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை போட்டிக்கு நிகரானது - உமேஷ் யாதவ் பேட்டி


டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை போட்டிக்கு நிகரானது - உமேஷ் யாதவ் பேட்டி
x
தினத்தந்தி 21 May 2021 9:37 PM GMT (Updated: 21 May 2021 9:37 PM GMT)

டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலக கோப்பை போட்டிக்கு நிகரானது என உமேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

இங்கிலாந்தில் உள்ள சவுத்தம்டனில் அடுத்த மாதம் 18-ந் தேதி தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இதனை அடுத்து அங்கு நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் அளித்த ஒரு பேட்டியில், ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி உலக கோப்பை இறுதிப்போட்டி போன்றது என்று ரஹானே, இஷாந்த் ஷர்மா ஆகியோர் கூறியது சரியானதாகும். அதையே தான் நானும் நினைக்கிறேன். ஒரு வீரராக நீங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி உங்களுக்கு உலக கோப்பை போட்டிக்கு நிகரானதாகும். அடுத்து குறுகிய வடிவிலான போட்டியில் எப்போது விளையாடப்போகிறோம் என்பது உறுதியாக தெரியவில்லை. எனவே ஒரு டெஸ்ட் வீரராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை உலக கோப்பை போட்டியாக நினைத்து செயல்பட வேண்டும்.

கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோர் அணியின் வீரர்களுக்கு நல்ல சுதந்திரமும், நம்பிக்கையும் அளிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். வீரர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கும் போது அவர்கள் சிறப்பாக செயல்பட முடியும். கடந்த 5 வருடங்களாக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு சரியான பாதையில் பயணிக்கிறது. தற்போதைய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இங்கிலாந்து ஆடுகளங்களில் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப தான் பந்து வீச்சின் தாக்கம் அமையும். எனவே அங்கு பொறுமையாகவும், கட்டுக்கோப்புடனும் பந்து வீச வேண்டியது அவசியமானதாகும்’ என்று தெரிவித்தார்.

Next Story