ஐ.பி.எல். தொடரை நடத்த வசதியாக டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை - இங்கிலாந்து ஏற்குமா?


ஐ.பி.எல். தொடரை நடத்த வசதியாக டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை - இங்கிலாந்து ஏற்குமா?
x
தினத்தந்தி 21 May 2021 10:07 PM GMT (Updated: 21 May 2021 10:07 PM GMT)

எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வசதியாக டெஸ்ட் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யுமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் நடந்து வந்த 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதியில் நின்று போனது. 4 அணி வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை காலவரையின்றி இந்திய கிரிக்கெட் வாரியம் ஒத்தி வைத்தது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ஒரு வேளை மீதமுள்ள ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏறக்குறைய ரூ.2,500 கோடி வருவாய் இழப்பை சந்திக்க வேண்டியது வரும்.

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் மத்தியில் தொடங்கி நவம்பர் வரை இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்பாக வெளிநாட்டில் எஞ்சிய ஐ.பி.எல். போட்டியை நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிரம் காட்டுகிறது. இங்கிலாந்து அல்லது ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஒன்றில் இந்த போட்டி நடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இப்போது 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக இந்தியாவுக்கு போதிய கால இடைவெளி தேவைப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் ஆகஸ்டு 4-ந்தேதி முதல் செப்டம்பர் 14-ந்தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டி அட்டவணையை மாற்றி அமைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியம், இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பிடம் வேண்டுகோள் விடுத்திருப்பது கிரிக்கெட் வாரிய வட்டார தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது டெஸ்ட் போட்டியை ஒரு வாரத்திற்கு முன்பாக நடத்தி முடிக்கும் வகையில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி செப்டம்பர் 7-ந்தேதிக்குள் டெஸ்ட் போட்டிகள் முடிந்து விட்டால் அதன் பிறகு கிடைக்கும் 3 வார இடைவெளியில் எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த முடியும். பெரும்பாலான நாட்களில் இரண்டு ஆட்டங்கள் வீதம் நடத்திவிடலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கணக்கு போட்டுள்ளது. எல்லாம் சரியாக அமைந்தால் இங்கிலாந்திலேயே மீதமுள்ள ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்தவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஆயத்தமாக உள்ளது.

ஆனால் இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்பது சந்தேகம் தான் என்று தெரிகிறது. ஏனெனில் ஜூலை 21-ந்தேதி முதல் ஆகஸ்டு 21-ந்தேதி வரை தி ஹன்ட்ரடு (100 பந்து போட்டி) கிரிக்கெட் போட்டியை இங்கிலாந்து நடத்துகிறது. டெஸ்ட் அட்டவணையில் திருத்தம் செய்தால், தி ஹன்ட்ரடு போட்டிக்கு மைதானத்தை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும். அத்துடன் இங்கிலாந்து வீரர்கள் இதில் பங்கேற்பதில் பிரச்சினைகள் வரலாம். அது மட்டுமின்றி ஓட்டலில் முன்பதிவு, கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு ஏற்பாடுகள், ஒளிபரப்புதாரர்களுக்குரிய அட்டவணை, டிக்கெட் விற்பனை ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு ஏற்கனவே ரசிகர்கள் டிக்கெட்டுகளை வாங்கி விட்டனர். இதில் தேவையில்லாமல் குழப்பம் உருவாகும். அதனால் இங்கிலாந்து என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த போட்டியில், ‘இந்த கொரோனா காலத்தில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால் டெஸ்ட் போட்டிக்குரிய தேதியை மாற்றக்கோரி இதுவரை அவர்கள் அதிகாரபூர்வமாக எங்களிடம் எதுவும் கேட்கவில்லை. எனவே இப்போதைக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஏற்கனவே திட்டமிட்டபடி நடக்கும்’ என்றார்.

Next Story