கொரோனாவிலிருந்து மீண்டார் பிரசித் கிருஷ்ணா: மும்பைக்கு நாளை பயணம்


கொரோனாவிலிருந்து மீண்டார் பிரசித் கிருஷ்ணா: மும்பைக்கு நாளை பயணம்
x
தினத்தந்தி 22 May 2021 9:59 AM GMT (Updated: 22 May 2021 9:59 AM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீண்டார்.

மும்பை,

கொரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன.

கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

மே 4 அன்று சஹா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த நாளன்று தான் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே 8 அன்று பிரசித் கிருஷ்ணா கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் மூவரும் கொரோனாவிலிருந்து மீண்டு விட்டார்கள். தற்போது பெங்களூரில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் பிரசித் கிருஷ்ணா, மும்பையில் தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்திய வீரர்களுடன் நாளை இணைகிறார். இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் மாற்று வீரர்களில் ஒருவராக பிரசித் கிருஷ்ணா இடம்பெற்றுள்ளார். இந்திய அணியினர் தனி விமானத்தில் ஜூன் 2 அன்று இங்கிலாந்துக்குப் புறப்படுகிறார்கள்.

Next Story