ஐ.பி.எல். தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டமில்லை: இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்


ஆஷ்லே ஜைல்ஸ்
x
ஆஷ்லே ஜைல்ஸ்
தினத்தந்தி 27 May 2021 10:56 PM GMT (Updated: 27 May 2021 10:56 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்காக எங்களது போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டம் இல்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு

கொரோனா பரவலால் பாதியில் நிறுத்தப்பட்ட 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை சிக்கலின்றி நடத்த வசதியாக இந்தியா-இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட அடங்கிய டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது. அதாவது டெஸ்ட் தொடர் செப்டம்பர் 14-ந்தேதி நிறைவடைகிறது. அதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாக முடியும் வகையில் டெஸ்ட் அட்டவணையை மாற்றும்படி மறைமுகமாக இந்திய கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தது. ஆனால் இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ் நேற்று அளித்த பேட்டியில், ‘டெஸ்ட் தொடர் அட்டவணையில் மாற்றம் செய்யும்படி இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரபூர்வமாக எந்த கோரிக்கையும் வைத்தது மாதிரி தெரியவில்லை. போட்டி அட்டவணையில் மாற்றம் செய்யும் திட்டம் ஏதும் இல்லை. எங்களை பொறுத்தவரை அடுத்து வரும் போட்டிகளுக்கு தயாராகுவோம்.

ஐ.பி.எல். போட்டிக்கு அனுமதி இல்லை

இங்கிலாந்து அணிக்கு தொடர்ச்சியாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததும் செப்டம்பர் 19 அல்லது 20-ந்தேதி நாங்கள் வங்காளதேசத்துக்கு சென்று விளையாட இருக்கிறோம். அதன் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு 20 ஓவர்போட்டி மற்றும் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க உள்ளோம்.வங்காளதேச போட்டிக்கு சில முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்க உள்ளோம். இது அவர்கள் வேறு இடங்களுக்கு (ஐ.பி.எல்.) சென்று விளையாட வேண்டும் என்பதற்காக அல்ல. நாங்கள் எங்களது போட்டி அட்டவணையை திறம்பட கையாள வேண்டி உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆஷஸ் டெஸ்ட் போட்டிகளுக்கு எங்களது வீரர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது முக்கியம்’ என்றார்.

இதன் மூலம் இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்கும் போது விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். இயான் மோர்கன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், மொயீன் அலி, கிறிஸ் வோக்ஸ், பேர்ஸ்டோ, ஜாசன் ராய் உள்பட 14 வீரர்கள் ஐ.பி.எல். ஒப்பந்தத்தில் உள்ளனர். அவர்கள் ஐ.பி.எல்.-ல் ஆட முடியாமல் போனால் அவர்களது அணிக்கு பின்னடைவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


Next Story