பயிற்சியாளர் ரமேஷ் பவாருடன் இணைந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை வலுவாக்க பணியாற்றுவேன்: கேப்டன் மிதாலி ராஜ் பேட்டி


மிதாலிராஜ்- ரமேஷ் பவார்
x
மிதாலிராஜ்- ரமேஷ் பவார்
தினத்தந்தி 28 May 2021 12:07 AM GMT (Updated: 28 May 2021 12:07 AM GMT)

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியை வலுவாக்க புதிய பயிற்சியாளர் ரமேஷ் பவாருடன் இணைந்து பணியாற்றுவேன் என்று கேப்டன் மிதாலி ராஜ் தெரிவித்தார்.

பனிப்போர் நீங்குமா?

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரமேஷ் பவார் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார். இந்திய பெண்கள் அணி வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் ஒரே ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் இருந்து ரமேஷ் பவார் தனது பயிற்சியாளர் பணியை தொடங்க இருக்கிறார்.முன்னதாக ரமேஷ் பவார் 2018-ம் ஆண்டில் 5 மாத காலம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக இருந்த போது வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையானது. இந்த போட்டிக்கு பிறகு இருவரும் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இ-மெயில் அனுப்பினார்கள். ‘தன்னை அவமானப்படுத்தியதுடன், தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ்பவார் முயற்சிக்கிறார்’ என்று மிதாலி ராஜூம், ‘மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அணியின் நலனை விட தனது தனிப்பட்ட சாதனையில் தான் அதிக கவனம் செலுத்துகிறார்’ என்று ரமேஷ் பவாரும் புகார் தெரிவித்தனர்.

இருவருக்கும் இடையிலான மோதல்போக்கு நடந்து 3 ஆண்டுக்கு பிறகு ரமேஷ் பவார் இந்திய அணியின் பயிற்சியாளராக மீண்டும் திரும்பி இருக்கிறார். பிரிஸ்டலில் வருகிற 16-ந் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் மிதாலிராஜூடன், ரமேஷ் பவார் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இதனால் முந்தைய பகையை மறந்து இருவரும் ஒன்றிணைந்து அணியை எப்படி வழிநடத்தப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மிதாலி ராஜ் பேட்டி

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த காலம் முடிந்து போய் விட்டது. நீங்கள் அதற்கு திரும்பி செல்ல முடியாது. பயிற்சியாளர் ரமேஷ் பவார் அணியின் முன்னேற்றத்துக்கான திட்டத்துடன் வந்து இருப்பார் என்று நம்புகிறேன். நாங்கள் ஒன்றினைந்து அணியை வழிநடத்தி செல்வோம். வருங்காலத்தில் அணியை மிகவும் வலுவானதாக உருவாக்க நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம். குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டிக்கு வலுவாக தயாராகுவோம்.

7 ஆண்டுகளுக்கு பிறகு நாங்கள் டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறோம். நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டியில் விளையாடாததால் திறந்த மனதுடன் விளையாட வேண்டியது அவசியமாதாகும். இந்த டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்த ஆண்டு கடைசியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இருப்பது நல்ல விஷயமாகும். நாங்கள் டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும். பெண்கள் கிரிக்கெட்டில் 3 வகையான (டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர்) போட்டிகளும் ஒன்றாக நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறேன். அனைத்து வகையான ஆட்டங்களையும் வீராங்கனைகள் அனுபவித்து விளையாட வேண்டும்’ என்றார்.


Next Story