“வீட்டில் பலரும் கொரோனாவில் சிக்கியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்” - அஸ்வின் உருக்கம்


“வீட்டில் பலரும் கொரோனாவில் சிக்கியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்” - அஸ்வின் உருக்கம்
x
தினத்தந்தி 28 May 2021 8:58 PM GMT (Updated: 28 May 2021 8:58 PM GMT)

குடும்பத்தினரை கொரோனா பாதித்ததால் 9 நாட்கள் தூக்கமின்றி தவித்ததாக, ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகியது குறித்து அஸ்வின் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மும்பை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக பங்கேற்ற சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் பாதியில் விலகினார். தனது குடும்பத்தினர் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவர்களை கவனிப்பதற்காக வீடு திரும்ப நேரிட்டது. 

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து பயணத்துக்காக மும்பை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 34 வயதான அஸ்வின், ஐ.பி.எல்.-ல் இருந்து விலகியது குறித்து யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“எனது குடும்பத்தில் ஏறக்குறைய அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் சில நெருங்கிய உறவினர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் எப்படியோ அவர்கள் குணமடைந்து விட்டனர்.

வீட்டில் பலரும் கொரோனாவில் சிக்கியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். இதனால் ஐ.பி.எல். தொடரின் போது 8-9 நாட்கள் நான் சரியாக தூங்கவில்லை. தூக்கமின்றிதான் போட்டிகளில் விளையாடினேன். தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்ததால் ஒரு கட்டத்தில் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகும் முடிவுக்கு வந்தேன். வீடு திரும்பும் போது, இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியுமா என்று கூட தோன்றியது. இருப்பினும் அந்த சமயத்தில் என்ன தேவையோ அதைத் தான் செய்தேன். இதற்கு இடையே எனது குடும்ப உறுப்பினர்கள் கொரோனாவில் இருந்து மீள தொடங்கிய போது, மீண்டும் ஐ.பி.எல்.போட்டியில் ஆடலாமா என்று யோசித்தேன். ஆனால் அதற்குள் ஐ.பி.எல். அணிகளிலும் பல வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டு விட்டது.

நான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டேன். தயவு செய்து அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கொரோனாவில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஒரே வழி.”

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

தங்களது குடும்பத்தில் ஒரே வாரத்தில் 6 பெரியவர்களும், 4 குழந்தைகளும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டதாக ஏற்கனவே அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story