ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லை பாண்டிங் கவலை


ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லை பாண்டிங் கவலை
x
தினத்தந்தி 29 May 2021 10:56 PM GMT (Updated: 29 May 2021 10:56 PM GMT)

ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யும் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் இல்லை பாண்டிங் கவலை.

சிட்னி,

இன்னும் சில மாதங்களில் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி வர உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி குறித்து அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யக்கூடிய பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது தான் ஆஸ்திரேலிய அணியில் எப்போதும் கவலைதரும் அம்சமாகும். இந்த வரிசை மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது. அதாவது அணியின் வெற்றிக்கு 3-4 ஓவர்களில் 50 ரன்கள் தேவை என்ற நிலையில் களம் இறங்கி அந்த இலக்கை அடையச் செய்யும் கடினமான பணியாகும்.

இந்தியாவின் டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் பின்வரிசையில் இறங்கி ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்கும் பணியை செய்தார். அதில் அவர் மிகச்சிறந்தவராக திகழ்ந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஆல்-ரவுண்டர்கள் ஹர்திக் பாண்ட்யா (இந்தியா), பொல்லார்ட் (வெஸ்ட் இண்டீஸ்) ஆகியோர் தங்கள் அணிக்கும், ஐ.பி.எல். அணிக்கும் தொடர்ந்து இது போன்று வெற்றியை தேடித் தருகிறார்கள். அவர்கள் இந்த வரிசையில் தான் தொடர்ந்து களம் இறங்குகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியில் இத்தகைய தரமான ஆட்டக்காரர்கள் இல்லாமல் போனதற்கு ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட்டில் டாப்-4 இடத்தில் இறங்குவது தான் காரணம். பின்வரிசையில் எந்த வீரரும் தொடர்ச்சியாக களம் காண்பதில்லை. அந்த இடத்திற்கு சரியான வீரரை கண்டறிய வேண்டியது அவசியமாகும். கடைசி கட்டத்தில் ஒரே வரிசையில் தொடர்ச்சியாக ஆடும் போது தான் அதில் நன்றாக செயல்படுவதற்குரிய அனுபவம் கிடைக்கும்.

இவ்வாறு பாண்டிங் கூறினார்.

Next Story