கங்குலியின் எதிர்ப்பையும் மீறி இந்திய அணிக்கு டோனியை தேர்வு செய்தது எப்படி? மனம் திறக்கிறார், கிரண்மோரே


கங்குலியின் எதிர்ப்பையும் மீறி இந்திய அணிக்கு டோனியை தேர்வு செய்தது எப்படி? மனம் திறக்கிறார், கிரண்மோரே
x
தினத்தந்தி 3 Jun 2021 1:39 AM GMT (Updated: 3 Jun 2021 1:39 AM GMT)

கங்குலியின் எதிர்ப்பையும் மீறி இந்திய அணிக்கு டோனியை தேர்வு செய்தது எப்படி? என்று கிரண்மோரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவரும், முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான கிரண் மோரே யூடியூப் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘2003-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட டிராவிட்டுக்கு மாற்றாக கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரை தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. 

அந்த சமயத்தில் உள்ளூர் ஆட்டங்களில் டோனியின் அதிரடியை பார்த்து அவரை விக்கெட் கீப்பராக கொண்டு வருவதற்காக 2004-ம் ஆண்டு துலீப் கோப்பை இறுதிப்போட்டியில் கிழக்கு மண்டல அணியின் விக்கெட் கீப்பராக நியமிக்க முயற்சித்தோம். இந்திய அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் தீப்தாஸ் குப்தா இருந்ததால் அவரை தவிர்த்து டோனியை விளையாட வைக்க கேப்டன் கங்குலி மற்றும் தேர்வு குழுவினர் ஆட்சேபம் தெரிவித்தனர்.

அவர்களை சம்மதிக்க வைக்க 10 நாட்களுக்கு மேல் போராட வேண்டியது இருந்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட டோனி இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்று சிறப்பாக செயல்பட்டு தேசிய அணிக்குள் அடியெடித்து வைத்து அசத்தினார். நல்ல குதிரையின் மீது பந்தயம் கட்டுவது போல் நாங்கள் டோனியின் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்தோம். அதற்குரிய பலன் கிடைத்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது’ என்றார்.

Next Story