‘விமர்சனங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்’: ரஹானே


‘விமர்சனங்களை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன்’: ரஹானே
x
தினத்தந்தி 17 Jun 2021 1:06 AM GMT (Updated: 17 Jun 2021 1:06 AM GMT)

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது (17 ஆட்டத்தில் 1,095 ரன்) இனிமையான உணர்வை தருகிறது. சரியாக ரன் எடுக்காத போது என்னை நோக்கி வரும் விமர்சனங்களை நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கிறேன். விமர்சனங்களால் தான் நான் இத்தகைய (உயர்ந்த) நிலையை எட்டியிருக்கிறேன். யார் என்னை விமர்சித்தாலும், இல்லாவிட்டாலும் எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவே எப்போதும் விரும்புவேன். ஒரு பேட்ஸ்மேனாகவும், பீல்டராகவும் அணிக்கு எனது சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டியது முக்கியம்.

விமா்சனங்களை பற்றி அதிகமாக சிந்திப்பதில்லை. கிரிக்கெட் நிபுணர்கள் என்னை விமர்சித்தால் அது அவர்களது வேலை. அதை நான் கட்டுப்படுத்த முடியாது. எனது கட்டுப்பாட்டில் இருப்பது எதுவெனில் முழு திறனை வெளிப்படுத்துவது, கடின உழைப்பு, அடிப்படையை சரியாக செய்வது இதில் தான் நான் கவனம் செலுத்துகிறேன். நான் எனது இயல்பான கிரிக்கெட்டை ஆடுகிறேன். சதம் அடிப்பதை விட அணியின் வெற்றியே முக்கியம். எனக்குள் அதிகமாக நெருக்கடியை கொண்டுவர விரும்பவில்லை. 30 அல்லது 40 ரன்கள் எடுத்து அணிக்கு பலன் அளித்தால் அதுவே சந்ேதாஷம் தான். நியூசிலாந்து தரமான அணி. அவர்களை எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம். இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணியினர், இங்கிலாந்துக்கு எதிராக 2 டெஸ்டில் ஆடியிருப்பது அவர்களுக்கு சாதகமான விஷயம் தான். ஆனால் நாங்கள் மனரீதியாக தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு ரஹானே கூறினார்.

Next Story