உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது எப்படி? ஒரு அலசல்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது எப்படி? ஒரு அலசல்
x

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பொதுவான இடத்தில் விளையாடப்போகும் முதல் 
டெஸ்ட் இது தான். மேலும் விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கோப்பையையும் வென்றதில்லை. இதேபோல் நியூசிலாந்து அணி கடந்த இரண்டு உலக கோப்பை போட்டிகளின் (50 ஓவர்) இறுதிசுற்றில் தோற்று 
இருக்கிறது. இரு அணிகளும் ஐ.சி.சி. கோப்பையை கையில் ஏந்தும் தருணத்துக்காக காத்திருப்பதால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

அதற்கு முன்பாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பற்றியும், அதில் இந்திய அணி எப்படி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது என்பது பற்றியும் இங்கு புரட்டி பார்க்கலாம்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் அறிமுகம்
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் உலக கோப்பை நடத்தப்பட்டு வந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உலக கோப்பையை 2019-ம் ஆண்டில் 
அறிமுகப்படுத்தியது.இதற்குரிய காலக்கட்டமாக 2019 முதல் 2021-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டன. 9 அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மொத்தம் 6 இரு நாட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாட வேண்டும். இதில் 3 தொடர் வெளிநாட்டில் இடம் பெற வேண்டும்.ஒவ்வொரு தொடருக்கும் அதிகபட்சமாக 120 புள்ளிகள் வழங்கப்படும். அதாவது 2 போட்டி கொண்ட தொடராக இருந்தால் டெஸ்ட் வெற்றிக்கு 60 புள்ளிகளும், டிரா ஆனால் வெற்றிக்குரிய புள்ளியில் 3-ல் ஒரு பங்காக 20 புள்ளியும் வழங்கப்படும். இதுவே 3 போட்டி கொண்ட தொடராக இருந்தால் வெற்றிக்கு 40 புள்ளிகளும், 4 போட்டிகள் என்றால் வெற்றிக்கு 30 புள்ளிகளும் கிடைக்கும்.

அசத்திய இந்தியா
இதன்படி தங்களது பயணத்தை கம்பீரமாக தொடங்கிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் (2-0), தென்ஆப்பிரிக்கா (3-0), வங்காளதேசம் (2-0), ஆஸ்திரேலியா (2-1), இங்கிலாந்து (3-1) ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் வெற்றி வாகை 
சூடியது. நியூசிலாந்தில் நடந்த 2 டெஸ்டுகளில் மட்டும் தோல்வியை தழுவியது. இலங்கை, பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் இந்திய அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் முதலிடம் வகித்தது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா அரக்கன் புகுந்ததால் நிறைய போட்டிகளை திட்டமிட்டபடி நடத்த முடியாமல் தள்ளிவைக்க வேண்டியதாகி விட்டது. சில டெஸ்ட் தொடர்கள் ரத்தாகின. இதனால் புள்ளி வழங்கும் விதிமுறையில் ஐ.சி.சி. மாற்றங்களை கொண்டு வந்தது. வெற்றிக்கு வழங்கப்படும் புள்ளிகள் சதவீதம் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு திடீரென சிக்கல் உருவானது. அதாவது இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.கடந்த பிப்ரவரி-மார்ச் மாதத்தில் நடந்த இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதன் பிறகு அஸ்வின்-அக்‌ஷர் பட்டேலின் சுழல் ஜாலத்தால் இங்கிலாந்தை சுருட்டிய இந்திய அணி எஞ்சிய 3 டெஸ்டிலும் வெற்றிக்கனியை பறித்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தது. இந்திய அணி தாங்கள் ஆடிய எல்லா டெஸ்டிலும் வெற்றி பெற்றிருந்தால் மொத்தம் 720 புள்ளிகள் பெற்றிருக்கும். ஆனால் 520 புள்ளிகள் மட்டுமே எடுத்ததால் அதன் சதவீதம் 72.2 ஆக கணக்கிடப்பட்டது.

நியூசிலாந்து எப்படி?
ஆஸ்திரேலியாவுக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு தென்பட்டது. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று விளையாட மறுத்ததால் அவர்களின் வாய்ப்பு பறிபோனது. நியூசிலாந்து அணி 5 தொடரில் விளையாடி 3-ல் வெற்றியும் (இந்தியாவுக்கு எதிராக 2-0, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2-0, பாகிஸ்தானுக்கு எதிராக 2-0) ஒன்றில் தோல்வியும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக (0-3) ஒன்றில் டிராவும் (இலங்கைக்கு எதிராக 1-1) கண்டு 70 சதவீதத்துடன் 2-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

Next Story