‘மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம்’- டிம் சவுதி


‘மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளோம்’- டிம் சவுதி
x
தினத்தந்தி 26 Jun 2021 1:03 AM GMT (Updated: 26 Jun 2021 1:03 AM GMT)

கிாிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலக கோப்பையை வென்று மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம் என நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி தெரிவித்தார்.

வெலிங்டன்,

சவுத்தம்டனில் நடந்த முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை வசப்படுத்தியது. கிாிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக உலக கோப்பையை ருசித்த நியூசிலாந்து வீரர்கள் குதூகலத்தில் திளைக்கிறார்கள்.

இதையொட்டி நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி அளித்த ஒரு பேட்டியில், ‘வாகை சூடிய இந்த அணியில் நானும் இருப்பது வியப்பூட்டுகிறது. இந்த வெற்றிக்காக கடந்த 2 ஆண்டுகளாக உழைத்திருக்கிறோம். நாங்கள் 15 வீரர்கள் மட்டுமல்ல, அனேகமாக கடந்த 5-6 ஆண்டுகளில் மற்றவர்கள் அளித்த பங்களிப்பால் தான் இந்த உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறோம். இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. வெற்றிக்களிப்பில் மூழ்கியுள்ள நாங்கள் மகிழ்ச்சியான தருணத்தில் இருந்து வெளிவர சில வாரங்கள் ஆகலாம்.

இந்த போட்டியில் கடைசி நாள் கடினமாக இருக்கும் என்பது தெரியும். 3 வகையான முடிவுகள் கிடைக்க வாய்ப்பு தென்பட்டது. அதில் முதல் 1 மணி நேரம் தான் முக்கியமாக இருந்தது. கோலி மற்றும் புஜாராவின் விக்கெட்டை சீக்கிரம் வீழ்த்தியது ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பியது. இருப்பினும் 139 ரன்கள் இலக்கை எட்டுவதற்கு நீண்ட நேரம் (45.5 ஓவர்) போராடியது இதற்கு முன்பு நான் கண்டிராத ஒரு அனுபவம். வீரர்கள் ஓய்வறையில் பதற்றத்துடனேயே போட்டியை பார்த்துக் கொண்டிருந்தோம்’ என்றார்.

Next Story