டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்கள் ஒதுக்கீடு: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்தீப் வாரியரை தேர்வு செய்தது


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்கள் ஒதுக்கீடு: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சந்தீப் வாரியரை தேர்வு செய்தது
x
தினத்தந்தி 1 July 2021 1:35 PM GMT (Updated: 1 July 2021 1:35 PM GMT)

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் தொடரை ஜூலை 19-ந்தேதி முதல் ஆகஸ்டு 15-ந்தேதி வரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக அரசின் அனுமதியை பொறுத்து போட்டி நடத்தப்படும். இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான வீரர்கள் ஒதுக்கீடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மொத்தம் 40 வீரர்கள் அணிகளுக்கு ஒதுக்கப்பட்டனர். இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியம், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரை தேர்வு செய்தது. இந்த சீசனில் கேரளா அணியில் இருந்து தமிழக அணிக்கு இடமாறிய சந்தீப் வாரியரை தேர்வு செய்ததன் மூலம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பந்து வீச்சு தாக்குதல் மேலும் வலுவடையும் என்று அந்த அணியின் கேப்டன் கவுசிக் காந்தி தெரிவித்தார். சந்தீப் வாரியர் தற்போது இலங்கை தொடருக்கான இந்திய அணியில் வலைபயிற்சி பவுலராக இருப்பதும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சீசனுக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வருமாறு:- பி. அருண், விஜய்குமார், ஆர்.சதீஷ், ராம்அர்விந்த், ஜெகநாத் சீனிவாஸ், சந்தானசேகர், எம். சித்தார்த், சுஜய், ஹரிஷ்குமார், அருண்குமார், பிரஷீத் ஆகாஷ், சாய் கிஷோர், ஆர்.ஜெகதீசன், சாய் பிரகாஷ், கவுசிக் காந்தி, அலெக்சாண்டர், சசிதேவ், சோனு யாதவ், டி.ராகுல், சந்தீப் வாரியர், நிலேஷ் சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன்.

Next Story