இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி
x
தினத்தந்தி 4 July 2021 11:02 PM GMT (Updated: 4 July 2021 11:02 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய பெண்கள் அணி ஆறுதல் வெற்றி பெற்றது. அதிக வெற்றிகளை குவித்த கேப்டன் என்ற மகத்தான சாதனையை மிதாலிராஜ் படைத்தார்.

வோர்செஸ்டர்,

இங்கிலாந்து - இந்தியா ெபண்கள் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வோர்செஸ்டரில் நேற்று முன்தினம் நடந்தது. மழையால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 47 ஓவர்களில் 219 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

தொடர்ந்து ஆடிய இந்திய அணி 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 4-வது அரைசதத்தை அடித்த கேப்டன் மிதாலிராஜ் 75 ரன்களுடன் (86 பந்து, 11 பவுண்டரி) களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்ட போது, பவுண்டரியுடன் மிதாலி இலக்கை எட்ட வைத்தார். இருப்பினும் இது இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இங்கிலாந்து தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மிதாலி சாதனை

இந்த ஆட்டத்தின் மூலம் மிதாலிராஜ் சில சாதனைகளை படைத்தார். அவரது தலைமையில் இந்தியா ருசித்த 84-வது (140 ஆட்டத்தில்) வெற்றி இதுவாகும். இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை தேடித்தந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க் இந்த வகையில் 83 வெற்றி பெற்றதே (101 ஆட்டம்) சாதனையாக இருந்தது. அத்துடன் ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்துக்கு (10,337 ரன், 317 ஆட்டம்) முன்னேறினார். இதுவரை இச்சாதனையை தக்க வைத்திருந்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன் சார்லோட் எட்வர்ட்ஸ் (10,273 ரன், 309 ஆட்டம்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். ஆண்களில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் சாதனையும் இந்தியா வசமே (சச்சின் தெண்டுல்கர்-34,357 ரன்) உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் முன்னேற்றம் தேவை

38 வயதான மிதாலிராஜ் கூறுகையில், ‘22 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். ஆனாலும் எனது ரன்வேட்டை தாகம் இன்னும் தணியவில்லை. களம் இறங்கி இந்திய அணிக்காக வெற்றித் தேடிதர வேண்டும் என்ற அதீத ஆர்வத்துடன் எனது பயணம் தொடருகிறது. எனது ேபட்டிங்கில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை அறிவேன். அதற்காக உழைத்து வருகிறேன். எனது பேட்டிங்கில் சில புதிய விஷயங்களை சேர்க்க விரும்புகிறேன்’ என்றார்.

மேலும் மிதாலிராஜ் கூறுகையில், ‘எனது பேட்டிங் ஸ்டிரைக் ரேட் குறித்து பலரும் விமர்சிப்பதை அறிவேன். ஆனால் ஏற்கனவே சொன்னது போல் இத்தகைய நபர்களிடம் இருந்து நான் எந்த அங்கீகாரத்தையும் கேட்கவில்லை. இந்திய அணிக்காக நான் நீண்ட காலமாக விளையாடி வருகிறேன். அணிக்குள் எனக்கு என்று பொறுப்புகள் உண்டு. அணி நிர்வாகம் என்ன சொல்கிறதே அதை செய்வதே எனது பணி’ என்றார்.

அடுத்து இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதலாவது ஆட்டம் வருகிற 9-ந்ேததி நார்த்தம்டனில் நடக்கிறது.

Next Story