வலை பயிற்சியில் பாண்ட்யா பந்து வீசுகிறார் சூர்யகுமார் பேட்டி


வலை பயிற்சியில் பாண்ட்யா பந்து வீசுகிறார் சூர்யகுமார் பேட்டி
x
தினத்தந்தி 6 July 2021 10:58 PM GMT (Updated: 6 July 2021 10:58 PM GMT)

வலை பயிற்சியில் பாண்ட்யா பந்து வீசுகிறார் சூர்யகுமார் பேட்டி.

கொழும்பு,

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 13-ந்தேதி கொழும்பில் நடக்கிறது. இந்த போட்டியில் விளையாட உள்ள பேட்ஸ்மேன் மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (காயப் பிரச்சினை காரணமாக பந்துவீசாததால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சேர்க்கப்படவில்லை) வலை பயிற்சியில் பந்து வீசி வருகிறார். எங்களுக்குள் இரு அணியாக பிரிந்து நடத்தப்பட்ட போட்டியிலும் அவர் பவுலிங் செய்தார். ஆனால் அவரை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது. இருப்பினும் அவர் பந்து வீசுவது நல்ல அறிகுறியாகும்.

இலங்கை முன்னாள் கேப்டன் ரணதுங்கா, இது 2-ம் தர இந்திய அணி என்று வர்ணித்துள்ளார். ஆனால் நாங்கள் அப்படி நினைக்கவில்லை. தொடரில் உற்சாகமாக விளையாடி சாதகமான அம்சங்களை எடுத்துக் செல்லவே இங்கு வந்துள்ளோம். அதற்காக சிறந்த முறையில் தயாராகி வருகிறோம். இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையில் இதற்கு முன்பு விளையாடி இருக்கிறோம். அதாவது இங்கு உள்ளது போன்று தான் மும்பை, சென்னையில் காற்றில் ஈரப்பதம் அதிகமிருக்கும். அதுமட்டுமின்றி 15-20 நாட்களுக்கு முன்பாகவே இலங்கைக்கு வந்து விட்டோம். அதுவே நல்ல விஷயமாகும். இங்கு நேற்று முன்தினம் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினோம். ஆடுகளம் நன்றாக இருந்தது. அதே போன்று தான் பிரதான போட்டியிலும் இருக்கும் என்று நம்புகிறோம். ஒருவேளை ஆடுகளத்தன்மை வேகம் குறைந்து காணப்பட்டால் நாங்கள் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு விளையாட வேண்டியது இருக்கும். அதுசிறந்த சவாலாக இருக்கும்.

இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.

Next Story