20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்


20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்
x
தினத்தந்தி 16 July 2021 10:04 PM GMT (Updated: 16 July 2021 10:04 PM GMT)

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன.

துபாய்,

16 அணிகள் பங்கேற்கும் 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் வருகிற அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் 20-ந் தேதி தரவரிசை அடிப்படையில் அணிகளுக்கான பிரிவு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி நேரடியாக 2-வது சுற்றில் (சூப்பர் 12) களம் காணும் 8 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இதில் குரூப்1-ல் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும், குரூப்2-ல் முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகள் 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு முதல்முறையாக சந்திக்க இருக்கின்றன. இரு அணிகளும் லீக் சுற்றிலேயே பலப்பரீட்சை நடத்த உள்ளன.

தொடக்க சுற்று லீக் ஆட்டத்தில் கலந்து கொள்ளும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ‘ஏ’ பிரிவிலும், வங்காளதேசம், ஸ்காட்லாந்து, பப்புவா நியூ கினியா, ஓமன் ‘பி’ பிரிவிலும் அங்கம் வகிக்கின்றன. முதல் சுற்று லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘பி’ பிரிவில் 2-வது இடம் பெறும் அணியும் குரூப்1-க்கும், ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும், ‘ஏ’ பிரிவில் 2-வது இடம் பெறும் அணியும் குரூப்2-க்கும் முன்னேறும். இந்த போட்டிக்கான அட்டவணை பிறகு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story