இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
x
தினத்தந்தி 17 July 2021 3:05 AM GMT (Updated: 17 July 2021 3:05 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், 31 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.

நாட்டிங்காம்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இரண்டாம் தர இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

கொரோனா பாதிப்பு காரணமாக இயான் மோர்கன் தலைமையிலான அணியினர் தனிமைப்படுத்தப்பட்டதால் 2ம் தர அணி களம் இறங்கியது. இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று நடைபெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் 49 பந்துகளில் 85 ரன்களும், முகமத் ரிஸ்வான் 41 பந்துகளில் 63 ரன்களும் எடுத்தனர். கடின இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது.

இதனிடையே அந்த அணியின் லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் 103 ரன்கள் விளாசினார். இருந்தபோதும் இங்கிலாந்து அணி 19.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷாதப் கான் மற்றும் ஷகின் அப்ரிதி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் 1-0 என்ற புள்ளிக்கணக்கில் பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. 

Next Story