டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணி 2-வது வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 25 July 2021 10:44 PM GMT (Updated: 25 July 2021 10:44 PM GMT)

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. நேற்று மாலை நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மதுரை பாந்தர்ஸ் அணி, திருச்சி வாரியர்சை எதிர்கொண்டது.

இதில் முதலில் பேட் செய்த மதுரை அணி 6 விக்கெட்டுக்கு 137 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. அதிகபட்சமாக ஜெகதீசன் கவுசிக் 44 ரன்கள் எடுத்தார். பின்னர் ஆடிய திருச்சி அணி 19 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 53 ரன்கள் விளாசிய (38 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) முகமது கான் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3-வது ஆட்டத்தில் ஆடிய திருச்சி அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

இரவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சை பதம் பார்த்தது. இதில் கோவை நிர்ணயித்த 202 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணி 18 ஓவர்களில் அதை எட்டிப்பிடித்தது. கேப்டன் ஹரி நிஷாந்த் (70 ரன், 6 பவுண்டரி, 5 சிக்சர்), மணி பாரதி (81 ரன், 8 பவுண்டரி, 5 சிக்சர்) அரைசதம் நொறுக்கினர்.

இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.

Next Story