டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணி 2-வது வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: மதுரை பாந்தர்ஸ் அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 3 Aug 2021 12:00 AM GMT (Updated: 3 Aug 2021 12:00 AM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ் எதிரான ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 2-வது வெற்றியை பதிவு செய்தது.

சென்னை, -

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 20-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த மதுரை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 184 ரன்கள் குவித்தது. ஜெகதீசன் கவுசிக் 40 ரன்னும் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), தொடக்க ஆட்டக்காரர் பிரவீன் குமார் 35 ரன்னும், பாலசந்தர் அனிருத் 33 ரன்னும் எடுத்தனர். கேப்டன் சதுர்வேத் 41 ரன்னுடனும் (23 பந்து, ஒரு பவுண்டரி, 4 சிக்சர்), அருண் கார்த்திக் 11 ரன்னுடனும் (3 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய திருப்பூர் அணியினர், மதுரை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். திருப்பூர் அணி 17.4 ஓவர்களில் 103 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராம்குமார் 42 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டினார்கள். 5-வது ஆட்டத்தில் ஆடிய மதுரை அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 6-வது ஆட்டத்தில் விளையாடிய திருப்பூர் அணி 3-வது தோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.


Next Story