இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சிறப்பான தொடக்கம் கண்டு தடுமாறிய இந்திய அணி மழையால் ஆட்டம் பாதிப்பு


இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: சிறப்பான தொடக்கம் கண்டு தடுமாறிய இந்திய அணி மழையால் ஆட்டம் பாதிப்பு
x
தினத்தந்தி 6 Aug 2021 1:54 AM GMT (Updated: 6 Aug 2021 1:54 AM GMT)

முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

நாட்டிங்காம், 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது. 2-வது நாளான நேற்று இந்திய ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். நிதானமாக ஆடி சூப்பரான தொடக்கம் தந்த இந்த ஜோடி ஸ்கோர் 97 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ரோகித் சர்மா (36 ரன், 107 பந்து, 6 பவுண்டரி) ராபின்சன் வீசிய ‘பவுன்சர்’ பந்தை அடித்து கேட்ச் ஆகிப்போனார். அடுத்து வந்த புஜாரா (4 ரன்), கேப்டன் விராட் கோலி (0) அடுத்தடுத்து விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடிபட்டு வெளியேறினர். இருவரது விக்கெட்டுகளையும் காலி செய்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் கும்பிளேவின் (619 விக்கெட்) சாதனையை சமன் செய்தார்.

இதன் பிறகு வந்த துணை கேப்டன் ரஹானே (5 ரன்) ரன்-அவுட் ஆக, இந்தியா நெருக்கடிக்குள்ளானது. இதற்கு மத்தியில் மற்றொரு தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் தனது 12-வது அரைசதத்தை நிறைவு செய்தார்.

இந்திய அணி 46.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராகுல் (57 ரன்), ரிஷாப் பண்ட் (7 ரன்) களத்தில் உள்ளனர். இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

Next Story