இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்:  இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 7 Aug 2021 7:08 PM GMT (Updated: 7 Aug 2021 7:08 PM GMT)

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது.

நாட்டிங்காம், 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 183 ரன்களும், இந்தியா 278 ரன்களும் எடுத்தன. 95 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3-வது நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 85.5 ஓவர்களில் 303 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. சதம் விளாசி அணியை சரிவில் இருந்து காப்பாற்றிய கேப்டன் ஜோ ரூட் 109 ரன்களில் (172 பந்து, 14 பவுண்டரி) கேட்ச் ஆனார். அவர் அடித்த 21-வது சதம் இதுவாகும். இந்தியாவுக்கு எதிராக 6-வது சதமாகும். சாம் கர்ரன் 32 ரன்களும், பேர்ஸ்டோ 30 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட்டும் சாய்த்தனர்.

இதன் மூலம் இந்திய அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா ஆட்ட நேர முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. வெற்றிக்கு மேலும் 157 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்திய வீரர்கள் பதற்றமின்றி நிலைத்து நின்று ஆடினால் வெற்றிக்கனியை பறிக்கலாம். இதனால் கடைசி நாள் ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story