டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றி
x
தினத்தந்தி 10 Aug 2021 6:02 PM GMT (Updated: 10 Aug 2021 6:05 PM GMT)

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது.

சென்னை,

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. விறுவிறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டி இன்று நடைபெற்றது.

இன்றைய ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திருச்சி அணியின் கேப்டன் ராஹில் ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கவுசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் களமிறங்கினர். சரவணன் குமார் வீசிய 2-வது ஓவரில் கவுசிக் காந்தி பவுல்ட்(1) ஆனார். மறுபுறம் 2 பவுண்டரிகளை விளாசிய ஜெகதீசன்(14) மீண்டும் சரவணன் குமாரின் பந்துவீச்சில் 4-வது ஓவரில் பவுல்ட் ஆனார்.

தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து அணி சற்று தடுமாறிய நிலையில், அடுத்து களமிறங்கிய ராதாகிருஷ்ணன் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். 54 பந்துகளில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களை பறக்கவிட்டு 82 ரன்களை சேர்த்த ராதாகிருஷ்ணன், இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

சசிதேவ் ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாறினாலும், சற்று நிதாமனாக ஆடி 29 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் மதினாணன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். ராஜகோபால் சதீஷ் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் சேர்த்தது. திருச்சி அணியில் அதிகபட்சமாக சரவணன் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய திருச்சி அணியில் சந்தோஷ் சிவ் 5 ரன்களும், சாத்விக் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராஜகோபாலுடன், ஜோடி சேர்ந்த ஆதித்யா கணேஷ் அதிரடியாக ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரன் ரேட் வேகமாக உயர்ந்தது. 

இந்த ஜோடியில் ராஜகோபால் 55 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி ஓவரில் வெற்றிபெற 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என்ற பரபரப்பான நிலையில் அதிரடியாக ஆடிய ஆதித்யா கணேஷ் சிக்சர் அடித்து திருச்சி அணியை வெற்றிபெற வைத்தார்.

முடிவில் திருச்சி அணி 19.5 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ரன்கள் எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக சித்தார்த் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம்  சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

Next Story