100 பந்து கிரிக்கெட்: ஓவல், சதர்ன் அணிகள் ‘சாம்பியன்’


100 பந்து கிரிக்கெட்: ஓவல், சதர்ன் அணிகள் ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 22 Aug 2021 6:17 PM GMT (Updated: 22 Aug 2021 6:17 PM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் புதுமையான தி ஹன்ரட் (100 பந்து வடிவிலான கிரிக்கெட்) கிரிக்கெட் போட்டி அங்குள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் புதுமையான தி ஹன்ரட் (100 பந்து வடிவிலான கிரிக்கெட்) கிரிக்கெட் போட்டி அங்குள்ள பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டது. 8 அணிகள் பங்கேற்ற பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் ஓவல் இன்வின்சிபில்ஸ்-சதர்ன் பிரேவ் அணிகள் லண்டன் லார்ட்சில் சந்தித்தன. இதில் முதலில் பேட் செய்த ஓவல் அணி 100 பந்தில் 6 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சதர்ன் அணி 98 பந்தில் 73 ரன்னில் சுருண்டது. வேகப்பந்து வீச்சாளர் மரிஜானே காப் 9 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட ஓவல் அணி, முதலாவது தி ஹன்ரட் கோப்பையை கைப்பற்றியது.

இதன் ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் சதர்ன் பிரேவ்- பர்மிங்காம் போனிக்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஜேம்ஸ் வின்ஸ் தலைமையிலான சதர்ன் பிரேவ் 5 விக்கெட்டுக்கு 168 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 36 பந்துகளில் 2 பவுண்டரி, 6 சிக்சருடன் 61 ரன்களும், ரோஸ் ஒயிட்லி 19 பந்தில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 44 ரன்களும் விளாசினர். அடுத்து களம் இறங்கிய மொயீன் அலி தலைமையிலான பர்மிங்காம் அணியால் 100 பந்தில் 5 விக்கெட்டுக்கு 136 ரன்களே எடுக்க முடிந்தது. லியாம் லிவிங்ஸ்டனின் (46 ரன், 19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்-அவுட் பர்மிங்காம் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. சதர்ன் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.

Next Story