ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் இரண்டு புதிய அணிக்கான டெண்டர்!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 31 Aug 2021 10:20 PM GMT (Updated: 31 Aug 2021 10:20 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேலும் இரு அணிகள் புதிதாக சேர்க்கப்படுகிறது. இதற்கான டெண்டர் விண்ணப்பம் வினியோகத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் தொடங்கியுள்ளது.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடந்து வருகிறது. இந்திய போட்டியின் மூலம் ஒவ்வொரு சீசனிலும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஏறக்குறைய ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுகிறது.

தற்போது 8 அணிகள் பங்கேற்று வரும் நிலையில் அணிகளின் எண்ணிக்கையை 2022-ம் ஆண்டில் இருந்து 10 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து புதிய இரு அணிகளுக்கான உரிமத்தை பெற விரும்பும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அழைப்பு விடுத்து டெண்டர் கோரியுள்ளது. டெண்டர் படிவத்தில் விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களும் இடம் பெற்றுள்ளன. ஆண்டுக்கு குறைந்தது ரூ.3 ஆயிரம் கோடி வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களே விண்ணப்பிக்க முடியும். மூன்று நிறுவனங்கள் இணைந்து ஒரே பெயரில் அணியை வாங்க விண்ணப்பிக்கலாம். ஆனால் 3-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்து கூட்டாக அணியை வாங்கும் முயற்சிக்கு அனுமதி இல்லை.

டெண்டர் விண்ணப்பத்தை அக்டோபர் 5-ந்தேதி வரை வாங்கிக் கொள்ளலாம். இதன் விலை ரூ.10 லட்சமாகும். இந்த தொகை திருப்பி தரப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு அணிகளை விற்பதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அணியின் அடிப்படை விலையே ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ஆமதாபாத், லக்னோ, புனே ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு அணிகள் உருவாக்கப்படும் என்று தெரிகிறது. அதானி குழுமம், ஆர்.பி.ஜி. சஞ்ஜீவ் கோயங்கா குரூப், மருந்து கம்பெனியான டோரென்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஐ.பி.எல். அணிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. 10 அணிகள் இடம் பெறும் போது ஆட்டங்களின் எண்ணிக்கை 60-ல் இருந்து 74 ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story