போட்டியின் போது ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த யூடியூப் பிரபலம்; இது மூன்றாவது முறை


போட்டியின் போது  ஓவல் மைதானத்திற்குள் நுழைந்த யூடியூப் பிரபலம்; இது மூன்றாவது முறை
x
தினத்தந்தி 4 Sep 2021 10:38 AM GMT (Updated: 4 Sep 2021 10:38 AM GMT)

முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டி நடைபெற்ற போதும் மைதானத்தில் யூடியூப் பிரபலம் ஜார்வோ அத்துமீறி நுழைந்தார்.

லண்டன்

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள்  கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

யூடியூப் பிரபலம் ஜார்வோ நேற்று  திடீர் என மைதானத்திற்குள் நுழைந்து குழப்பத்தை ஏற்படுத்தினார். 

நேற்று, லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ஜார்வோ, இங்கிலாந்து இன்னிங்ஸின்போது திடீரென மைதானத்துக்குள் ஓடிவந்தார். கையில் பந்துடன் வந்த ஜார்வோ, இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ மீது மோதினார். இதனால் ஆட்டம் சிறிது நேரம்  நிறுத்தப்பட்டது. உடனே மைதான பாதுகாவலர்கள் மைதானத்துக்குள் வந்து ஜார்வை அழைத்துச் சென்றார்கள். இதைதொடர்ந்து  ஜார்வோவை மெட்ரோபாலிடன் போலீசார் கைது செய்துள்ளார்கள்.

இதற்கு முன்பு லார்ட்ஸ் மற்றும் லீட்ஸ் மைதானங்களில் டெஸ்ட் போட்டி  நடைபெற்ற போதும் மைதானத்தில் அத்துமீறி நுழைந்தார் ஜார்வோ. லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி பேட்ஸ்மேன் போல உடையணிந்து மைதானத்துக்குள் நுழைந்தார். இதன் வீடியோவையும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். இதையடுத்து லீட்ஸ் மைதானத்தில் நுழைய அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Next Story