இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ரோகித் சர்மா சதத்தால் சிக்கலில் இருந்து மீண்டது இந்தியா


இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட்: ரோகித் சர்மா சதத்தால் சிக்கலில் இருந்து மீண்டது இந்தியா
x
தினத்தந்தி 5 Sep 2021 12:53 AM GMT (Updated: 5 Sep 2021 12:53 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் ரோகித் சர்மாவின் சதத்தால் இந்திய அணி சிக்கலில் இருந்து மீண்டது.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன.

அடுத்து 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2-வது நாள் முடிவில் 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா 20 ரன்னுடனும், லோகேஷ் ராகுல் 22 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து விளையாடினர். நெருக்கடிக்கு மத்தியில் இங்கிலாந்து பந்து வீச்சை திறம்பட சமாளித்த இவர்கள் வலுவான அடித்தளம் அமைத்து தந்தனர். முந்தைய நாள் 6 ரன்னில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த ரோகித் சர்மாவுக்கு மீண்டும் மறுவாழ்வு கிடைத்தது. இந்த முறை 31 ரன்னில் ஸ்லிப்பில் நின்ற ரோரி பர்ன்ஸ் தவற விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரோகித் சர்மா கணிசமாக ரன்கள் திரட்டினார்.

ரோகித் சர்மா சதம்

அணியின் ஸ்கோர் 83 ரன்களாக உயர்ந்த போது லோகேஷ் ராகுல் 46 ரன்களில் (101 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன் கைகோர்த்த புஜாரா, ஒரேயடியாக தடுப்பாட்டத்தில் ஈடுபடாமல் ஓரளவு வேகமாக ரன்களும் எடுத்தார். இங்கிலாந்து பவுலர்கள் தன் மீது அழுத்தத்தை திணிக்க விடாமல் பார்த்துக் கொண்டார்.

மறுமுனையில் அபாரமாக ஆடிய ரோகித் சர்மா மொயீன் அலியின் பந்து வீச்சில் பந்தை சிக்சருக்கு விரட்டி தனது 8-வது சதத்தை நிறைவு செய்தார். வெளிநாட்டு மண்ணில் அவர் சுவைத்த முதல் சதம் இதுதான். முன்னதாக 80 ரன்னில் இருந்த போது டெஸ்டில் 3 ஆயிரம் ரன்களையும் கடந்தார்.

புதிய பந்தில் விக்கெட்

80 ஓவருக்கு பிறகு எடுக்கப்பட்ட புதிய பந்தில் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்களை பறிகொடுத்தது. ஸ்கோர் 236 ரன்களாக உயர்ந்த போது, ரோகித் சர்மா ராபின்சனின் ஷாட்பிட்ச் பந்து வீச்சை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அணியை சிக்கலான கட்டத்தில் இருந்து மீட்டு திடமான நிலைக்கு நகர்த்திய ரோகித் சர்மா 127 ரன்களில் (256 பந்து, 14 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார். அதே ஓவரில் புஜாராவும் (61 ரன், 127 பந்து, 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 92 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் முன்கூட்டியே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது இந்தியா 171 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கேப்டன் விராட் கோலி (22 ரன்), ரவீந்திர ஜடேஜா (9 ரன்) களத்தில் உள்ளனர்.

4-வது நாளான இன்று இந்திய அணி நிலைத்து நின்று ஆடி அதிகமான ரன்கள் சேர்த்தால்தான் இங்கிலாந்துக்கு சவாலான ஸ்கோரை இலக்காக நிர்ணயிக்க முடியும்.

Next Story