4-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 466 ரன் குவித்து ஆல்-அவுட் இங்கிலாந்துக்கு 368 ரன்களை இலக்காக நிர்ணயித்தது


4-வது டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி 466 ரன் குவித்து ஆல்-அவுட் இங்கிலாந்துக்கு 368 ரன்களை இலக்காக நிர்ணயித்தது
x
தினத்தந்தி 6 Sep 2021 12:50 AM GMT (Updated: 6 Sep 2021 12:50 AM GMT)

லண்டனில் நடந்து வரும் 4-வது டெஸ்டில் இந்திய அணி 368 ரன்களை இங்கிலாந்துக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 191 ரன்களும், இங்கிலாந்து 290 ரன்களும் எடுத்தன. 99 ரன்கள் பின்தங்கிய நிலையில்2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 270 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி (22 ரன்), ரவீந்திர ஜடேஜா (9 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணியினர் ஒரு சில தருணங்களில் தடுமாற்றங்களை சந்தித்தாலும் மற்றபடி பேட்டிங்கில் கோலோச்சி இங்கிலாந்து பவுலர்களை திகைக்க வைத்தனர். ஜடேஜா 17 ரன்னிலும், கேப்டன் கோலி 44 ரன்களிலும் (96 பந்து, 7 பவுண்டரி) வெளியேறினர். கோலி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற கிரேக் ஓவர்டானிடம் கேட்ச் ஆனார். இதற்கிடையே துணை கேப்டன் ரஹானே டக்-அவுட் ஆனார். வந்த வேகத்தில் கிறிஸ்வோக்சின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆன ரஹானே டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்து தப்பித்தார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாத ரஹானே அவரது அடுத்த ஓவரில் மறுபடியும் எல்.பி.டபிள்யூ.வில் சிக்கி நடையை கட்டினார்.

மிரட்டிய ஷர்துல் தாக்குர்

6 விக்கெட்டுக்கு 312 ரன்களுடன் சற்று நெருக்கடிக்குள்ளான இந்திய அணியை 7-வது விக்கெட்டுக்கு கூட்டணி அமைத்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும், ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்குரும் மீட்டெடுத்தனர். முதல் இன்னிங்சை போலவே அதிரடியில் மிரட்டிய தாக்குர் தொடர்ந்து 2-வது அரைசதத்தை அடித்தார். அணிக்கு வலுவூட்டிய இவர்கள் 400 ரன்களையும் தாண்ட வைத்தனர்.

ஸ்கோர் 412 ரன்களை எட்டிய போது ஷர்துல் தாக்குர் 60 ரன்களில் (72 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். 37 ரன்னில் எளிய ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பித்த ரிஷாப் பண்ட் (50 ரன், 106 பந்து, 4 பவுண்டரி) மொயீன் அலியின் பந்துவீச்சில் சில அடி இறங்கி வந்து ஓங்கி அடித்த போது, அதை பவுலிங் செய்த மொயீன் அலியே சாதுர்யமாக கேட்ச் செய்து விட்டார். கடைசி பகுதியில் உமேஷ் யாதவ் (25 ரன், ஒரு பவுண்டரி, 2 சிக்சர்), ஜஸ்பிரித் பும்ரா (24 ரன், 4 பவுண்டரி) ஆகியோரும் கணிசமான பங்களிப்பை அளித்தனர். முடிவில் இந்திய அணி 2-வது இன்னிங்சில் 148.2 ஓவர்களில் 466 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது.

368 ரன் இலக்கு

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 368 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 300 ரன்களுக்கு மேலான இலக்கை எந்த அணியும் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்ததில்லை. 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து 263 ரன் இலக்கை எட்டியதே இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்ச சேசிங்காகும்.

கடின இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடி வலுவான தொடக்கம் தந்தனர்.

ஆட்டநேர முடிவில் 32 ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் எடுத்திருந்தது. ஹசீப் ஹமீத் (43 ரன்), ரோரி பர்ன்ஸ் (31 ரன்) களத்தில் இருந்தனர். இங்கிலாந்தின் வெற்றிக்கு இன்னும் 291 ரன் தேவைப்படு கிறது.

இன்று கடைசி நாள் என்பதால் இந்த டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 191

இங்கிலாந்து 290

2-வது இன்னிங்ஸ்

இந்தியா

ரோகித் சர்மா (சி) வோக்ஸ்

(பி) ராபின்சன் 127

லோகேஷ் ராகுல் (சி)

பேர்ஸ்டோ (பி) ஆண்டர்சன் 46

புஜாரா (சி)அலி(பி)ராபின்சன் 61

கோலி (சி) ஓவர்டான்(பி)அலி 44

ஜடேஜா எல்.பி.டபிள்யூ

(பி) வோக்ஸ் 17

ரஹானே எல்.பி.டபிள்யூ

(பி) வோக்ஸ் 0

ரிஷாப் பண்ட் (சி) அண்ட் (பி)

அலி 50

ஷர்துல் தாக்குர் (சி) ஓவர்டான்

(பி) ரூட் 60

உமேஷ் யாதவ் (சி) அலி (பி)

ஓவர்டான் 25

பும்ரா (சி) அலி (பி) வோக்ஸ் 24

முகமது சிராஜ் (நாட்-அவுட்) 3

எக்ஸ்டிரா 9

மொத்தம் (148.2 ஓவர்களில்

ஆல்-அவுட்) 466

விக்கெட் வீழ்ச்சி: 1-83, 2-236, 3-237, 4-296, 5-296, 6-312, 7-412, 8-414, 9-450

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன் 33-10-79-1

ராபின்சன் 32-7-105-2

கிறிஸ் வோக்ஸ் 32-8-83-3

ஓவர்டான் 18.2-3-58-1

மொயீன் அலி 26-0-118-2

ஜோ ரூட் 7-1-16-1

Next Story