இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு


இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 6 Sep 2021 1:03 AM GMT (Updated: 6 Sep 2021 1:03 AM GMT)

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது லண்டன் ஓவலில் 4-வது டெஸ்டில் விளையாடி வருகிறது. அணியின் தலைமை பயிற்சியாளர் 59 வயதான ரவிசாஸ்திரிக்கு நேற்று முன்தினம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு யார் மூலம் எப்படி கொரோனா ஊடுருவியது என்பது தெரியவில்லை.

இதையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மருத்துவ குழுவின் அறிவுரையின்படி, இவர்கள் அணியினருடன் செல்லாமல் தொடர்ந்து ஓட்டலிலேயே தங்கியிருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கும் சோதனை

பயிற்சியாளருக்கு தொற்று வந்ததால் இந்திய அணி வீரர்கள் யாருக்காவது தொற்று ஏற்பட்டிருக்குமோ என்பதை அறிய வீரர்களுக்கு நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் இரண்டு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்தது. அதன் பிறகே 4-வது டெஸ்டில் 4-வது நாளான நேற்று காலை வீரர்கள் களம் இறங்க அனுமதிக்கப்பட்டனர்.

பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் இல்லாததால் இந்திய அணியினருக்கு உதவுவதற்கு 2-வது பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பார்மர் அணியினருடன் சென்றுள்ளார்.

இந்த இங்கிலாந்து தொடரில் ஏற்கனவே இந்திய விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கொரோனாவில் சிக்கி குணமடைந்தார். இதே போல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வலை பயிற்சியாளருடன் தொடர்பில் இருந்ததாக பந்து வீச்சு பயிற்சியாளர் பரத்அருண், வீரர்கள் விருத்திமான் சஹா, அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story