20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு சர்ப்ராஸ் அகமது இடம்பெறவில்லை


20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிப்பு சர்ப்ராஸ் அகமது இடம்பெறவில்லை
x
தினத்தந்தி 7 Sep 2021 1:25 AM GMT (Updated: 7 Sep 2021 1:25 AM GMT)

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு இடம் கிடைக்கவில்லை.

கராச்சி,

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17-ந் தேதி முதல் நவம்பர் 14-ந் தேதி வரை நடக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. பாபர் அசாம் தலைமையிலான 15 பேர் கொண்ட அணியில் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, தொடக்க ஆட்டக்காரர் ஷர்ஜீல் கான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி தொடர்களில் இடம் பெற்று இருந்த இந்த இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆசிப் அலி, குஷ்தில் ஷா ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார்கள். பேட்ஸ்மேன் சோகைப் மசூத் அணியில் தொடருகிறார்.

ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். மூன்று 20 ஓவர் போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கும் 23 வயதான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான அசம்கான் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் வீரர் மொயின்கானின் மகன் ஆவார். மாற்று வீரர்களாக உஸ்மான் காதிர், ஷாநவாஸ் தஹானி, பஹர் ஜமான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணி வீரர்கள்

உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வருமாறு:-

பாபர் அசாம் (கேப்டன்), ஷதப் கான் (துணை கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆசிப் அலி, சோகைப் மசூத், அசம்கான் (விக்கெட் கீப்பர்), குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், ஷகீன் அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி, இமாத் வாசிம், முகமது ஹஸ்னைன்.

20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாக பாகிஸ்தான் அணி, லாகூரில் நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து 20 ஓவர் போட்டியிலும் (வருகிற 25-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை), ராவல்பிண்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியிலும் (அக்டோபர் 13, 14-ந் தேதி) விளையாடுகிறது. இந்த இரண்டு போட்டி தொடரிலும் இதே பாகிஸ்தான் அணி விளையாடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக் திடீர் ராஜினாமா

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல்-ஹக், பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்கள் பதவியில் இருந்து நேற்று திடீரென விலகினார்கள். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர்கள் தங்கள் முடிவை வெளியிட்டனர். 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இருவரும் அதிரடியாக விலகி இருக்கிறார்கள். 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்ற இருவருக்கும் இன்னும் ஒரு ஆண்டு காலம் ஒப்பந்தம் எஞ்சி இருக்கும் நிலையில் இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர். ‘மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தில் கணிசமான நேரத்தை செலவிட வேண்டி இருப்பதால் குடும்பத்தினருடன் போதிய நேரத்தை கழிக்க முடியவில்லை. இதனால் விலகல் முடிவை எடுத்துள்ளேன்’ என்று மிஸ்பா உல்-ஹக் தெரிவித்துள்ளார். ‘மிஸ்பாவுடன் இணைந்து பணியை தொடங்கிய தான் அவருடன் சேர்ந்து விலகுவது சரியானதாகும்’ என்று வக்கார் யூனிஸ் தனது விலகலுக்கு விளக்கம் தெரிவித்து இருக்கிறார்.

மிஸ்பா உல்-ஹக், வக்கார் யூனிஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருப்பதை உறுதி செய்து இருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் அணியின் இடைக்கால பயிற்சியாளர்களாக முன்னாள் வீரர்கள் சக்லைன் முஸ்தாக், அப்துல் ரசாக் ஆகியோர் இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளது. 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியின் பயிற்சியாளர் விரைவில் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புதிய தலைவராக முன்னாள் கேப்டன் ரமிஸ் ராஜா விரைவில் பொறுப்பேற்க இருப்பதால் இருவரும் விலகல் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

Next Story