இங்கிலாந்து மூன்று முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகல்


இங்கிலாந்து மூன்று முன்னணி வீரர்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 12 Sep 2021 12:03 AM GMT (Updated: 12 Sep 2021 12:03 AM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கிறிஸ் வோக்ஸ், பேர்ஸ்டோ,டேவிட் மலான் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), 20 ஓவர் கிரிக்கெட்டின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேன் டேவிட் மலான் (பஞ்சாப் கிங்ஸ்), ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் (டெல்லி கேப்பிட்டல்ஸ்) ஆகியோர் சொந்த காரணங்களுக்காக வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக எஞ்சிய ஐ.பி.எல்.-ல் விளையாடவில்லை என்று அவர்கள் கூறினாலும், அமீரகத்தில் 6 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திடீரென கடுமையான உத்தரவை பிறப்பித்திருப்பது அவர்களை பாதித்து இருப்பதாக கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி தெரிவித்தார். ஆரம்பத்தில் இத்தகைய தனிமைப்படுத்துதல் அவசியம் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்திய அணியின் பயிற்சி குழுவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் தனது முடிவை மாற்றிக்கொண்டது.

இந்த 3 வீரர்களும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இங்கிலாந்து அணியில் அங்கம் வகிக்கிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரிலும் இடம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகிய இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள் ஒதுங்கிய நிலையில், மேலும் 3 முன்னணி வீரர்கள் ஐ.பி.எல்.-ல் இருந்து பின்வாங்கி இருப்பது சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. பஞ்சாப் அணி டேவிட் மலானுக்கு பதிலாக தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் எய்டன் மார்க்ராமை ஒப்பந்தம் செய்துள்ளது. மற்ற இருவருக்கு பதிலாக சரியான மாற்று வீரர்களை அணி நிர்வாகம் தேடி வருகிறது.

அதே சமயம் மொயீன் அலி, சாம் பில்லிங்ஸ், சாம் கர்ரன், டாம் கர்ரன், ஜார்ஜ் கார்டன், மோர்கன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், லிவிங்ஸ்டன், ஜாசன் ராய் ஆகிய இங்கிலாந்து வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story