ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க விராட் கோலி, அஸ்வின் துபாய் சென்றனர்


ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க விராட் கோலி, அஸ்வின் துபாய் சென்றனர்
x
தினத்தந்தி 12 Sep 2021 10:49 PM GMT (Updated: 12 Sep 2021 10:49 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்பதற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அஸ்வின், ரஹானே உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்தில் இருந்து துபாய் சென்றனர்.

துபாயில் கோலி
மான்செஸ்டரில் நடக்க இருந்த இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொரோனா அச்சத்தால் ரத்து செய்யப்பட்டது. அணியின் பிசியோதெரபிஸ்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய வீரர்கள் அனைவருக்கும் இரண்டு முறை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் வீரர்கள் யாருக்கும் தொற்று இல்லை என்றாலும் அவர்கள் டெஸ்டில் விளையாட மறுத்து விட்டனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்திய வீரர்கள் அங்கிருந்து 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபிக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோரை இங்கிலாந்தில் இருந்து தனி விமானத்தில் அழைத்து வர பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதன்படி விமான மூலம் நேற்று காலை துபாய் சென்றடைந்த இருவரும் உடனடியாக ஓட்டலில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். தனிமைப்படுத்துதலின் போது அவர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்தின் கைல் ஜாமிசன், ஆஸ்திரேலியாவின் டேன் கிறிஸ்டியன் ஆகியோரும் பெங்களூரு அணியுடன் இணைந்துள்ளனர்.

சென்னை வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்சை சேர்ந்த ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ஷர்துல் தாக்குர் மற்றும் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு துபாய் வந்து சேர்ந்தனர். மற்றொரு இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் ஓரிரு நாட்களில் வருகை தர இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்தார்.தற்போது வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இம்ரான் தாஹிர், பாப் டு பிளிஸ்சிஸ், வெய்ன் பிராவோ ஆகியோர் அந்த தொடர் நிறைவடைந்ததும் சென்னை அணியுடன் இணைவார்கள் என்றும் அவர் கூறினார்.

அஸ்வின்- ரஹானே
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீரர்கள் ரிஷாப் பண்ட், அஸ்வின், ரஹானே, பிரித்வி ஷா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா, அக்‌ஷர் பட்டேல் உள்ளிட்டோரும் மான்செஸ்டரில் இருந்து நேற்று துபாய் போய் சேர்ந்தனர். அவர்களும் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 2-வது கட்ட ஆட்டங்கள் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்சை துபாயில் சந்திக்கிறது.

Next Story