வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது ஊழல் தடுப்பு விதி மீறல் புகார்
ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துபாய்,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் சாமுவேல்ஸ். 40 வயதான இவர் 2012, 2016-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். சாமுவேல்ஸ் 2019-ம் ஆண்டு அமீரகத்தில் நடந்த 10 ஓவர் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்று விளையாடிய போது சர்ச்சையில் சிக்கினார். அது தொடர்பாக விசாரித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவு அவர் மீது ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக 4 பிரிவுகளில் குற்றச்சாட்டை தற்போது பதிவு செய்துள்ளது.
இதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு அவமதிப்பு தேடித் தரும் நோக்கில் விருந்தோம்பலின் போது வழங்கப்பட்ட மிகப்பெரிய பரிசுப்பொருள், பணம் அல்லது இதர ஆதாயங்கள் பெற்றதை ஐ.சி.சி.க்கு தகவல் தெரிவிக்க தவறிய புகாரும் அடங்கும். 14 நாட்களுக்குள் அவர் பதில் அளிக்க அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சாமுவேல்ஸ் மீது எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரிய வரும்.
Related Tags :
Next Story