பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் தோற்றோம்: மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா


பேட்ஸ்மேன்கள் சொதப்பலால் தோற்றோம்: மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா
x
தினத்தந்தி 27 Sep 2021 11:41 PM GMT (Updated: 27 Sep 2021 11:41 PM GMT)

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோற்றோம் என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

விராட்கோலி மகிழ்ச்சி
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 166 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 111 ரன்னில் முடங்கியது. 56 ரன்கள் (37 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்ததுடன், 2 விக்கெட்டும் வீழ்த்திய பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த ஆண்டின் தொடக்க லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்று இருந்தது. இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி முதல்முறையாக ஒரே சீசனில் 2 தடவை மும்பையை வீழ்த்தி இருக்கிறது.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு அணியின் கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘நாங்கள் வெற்றி பெற்ற விதம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. 2-வது ஓவரிலேயே தேவ்தத் படிக்கல் ஆட்டம் இழந்தது எங்களுக்கு கடினமான தொடக்கமாக அமைந்தது. கே.எஸ்.பரத் தனது அற்புதமான ஷாட்டால் எனது நெருக்கடியை குறைத்தார். மேக்ஸ்வெல் ஆட்டம் நம்பமுடியாத வகையில் இருந்தது. உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் பந்து வீச்சுக்கு எதிராக நீங்கள் உங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த நேர்த்தியாக செயல்பட முயற்சிக்காவிட்டால் அவர் உங்களை வீழ்த்தி விடுவார். நாங்கள் இன்னும் 20-25 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கலாம் என்று கருதுகிறோம். டேன் கிறிஸ்டியன் தனது கடைசி ஓவரை அற்புதமாக வீசினார். ஹர்ஷல் பட்டேல் பந்து வீச்சு நம்பமுடியாததாக இருந்தது’ என்றார்.

ரோகித் சர்மா கருத்து
தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘எங்களது பந்து வீச்சு அருமையாக இருந்தது. பெங்களூரு அணியினர் 180 ரன்களை எட்டுவார்கள் என்று நினைத்தோம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அவர்களை நன்றாக கட்டுப்படுத்தினார்கள். பேட்ஸ்மேன்கள் சொதப்பியது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பேட்ஸ்மேன்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது இந்த சீசனில் எங்களுக்கு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன் கடைசி வரை தொடர்ந்து ஆடுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். நான் மோசமான ‘ஷாட்’ ஆடி ஆட்டம் இழந்தேன். அது ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக அமைந்ததாக கருதுகிறேன். நாங்கள் ஒருசில விக்கெட்டுகளை இழந்ததும் அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்தனர். எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். கடந்த காலங்களில் சரிவில் இருந்து நன்றாக மீண்டு வந்து இருக்கிறோம். ஆனால் அதுபோல் இந்த சீசனில் நடக்கவில்லை. இஷான் கிஷன் திறமையான வீரர். அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக ஆடினார். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவருக்கு அதிக நெருக்கடி அளிக்க விரும்பவில்லை. சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்து இருக்கும் அவர் இளம் வீரர் ஆவார்’ என்றார்.

முன்னேற முடியும்
மும்பை அணியின் பந்து வீச்சு ஆலோசகர் ஜாகீர்கான் அளித்த பேட்டியில், ‘பிட்ச்’ பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த அணி எப்படி தொடங்கியது. நாங்கள் எப்படி பேட்டிங்கை தொடங்கினோம் என்பதில் இருந்தே உங்களுக்கு புரிந்து இருக்கும். எங்களது பேட்ஸ்மேன்கள் சரியான பார்மில் இல்லை. எங்களது மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடந்த 3 ஆட்டங்களில் சரியாக செயல்படவில்லை. இதனால் எங்களுக்கு நிறைய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நல்ல தொடக்கம் கண்டாலும் விக்கெட்டுகளை தொடர்ந்து இழக்கும் போது சரிவில் இருந்து மீண்டு வர முடியாது. ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்த ஹர்ஷல் பட்டேல் பந்து வீச்சு அருமையாக இருந்தது. அவரது மெதுவான (ஸ்லோ) பந்து வீச்சு சிறப்பானதாகும். இத்தகைய பந்து வீச்சு ஐ.பி.எல். போட்டியில் முக்கிய அங்கம் வகித்து வருகிறது. தற்போது யோசிக்க எங்களுக்கு அதிக நேரம் இல்லை. நாம் மிகவும் வேகமாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். இனிவரும் ஆட்டங்களில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலை எங்களுக்கு உருவாகி இருக்கிறது. எங்களது ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க நேர்த்தியாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும். நாங்கள் முன்னோக்கி செல்ல ஆக்ரோஷத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். கடந்த காலங்களில் இதுபோன்ற நிலையில் இருந்து நாங்கள் சிறப்பாக செல்பட்டு மீண்டு இருக்கிறோம். எனவே இப்போதும் எங்களால் நன்றாக செயல்பட்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Next Story