இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லி-சென்னை அணிகள் நாளை மோதல்


இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் டெல்லி-சென்னை அணிகள் நாளை மோதல்
x
தினத்தந்தி 8 Oct 2021 9:01 PM GMT (Updated: 8 Oct 2021 9:01 PM GMT)

நாளை துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன.

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் சுற்று நிறைவடைந்தது.  லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் நடையை கட்டின.

போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் கோதாவில் குதிக்கின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

11-ந்தேதி சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது, 4-வது இடங்களை பெற்ற பெங்களூரு-கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் 13-ந்தேதி மோதும். மகுடத்துக்கான இறுதிப்போட்டி வருகிற 15-ந்தேதி துபாயில் அரங்கேறுகிறது.


Next Story