20 ஓவர் உலகக் கோப்பை: டோனியின் முடிவு என்ன !


20 ஓவர் உலகக் கோப்பை: டோனியின் முடிவு என்ன !
x
தினத்தந்தி 10 Oct 2021 6:46 AM GMT (Updated: 10 Oct 2021 6:46 AM GMT)

20 ஓவர் உலகக் கோப்பையில் ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் விளையாடும் வாய்ப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.

புது டெல்லி,

20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோரின் விளையாடும் வாய்ப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. வருண் சக்ரவர்த்தியின் உடற்தகுதி ஒரு பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. பாண்டியா பந்துவீச மாட்டார் என்பதால் அவர் ஒரு பேட்ஸ்மேனாக  மட்டுமே ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4 ஓவர்கள் மட்டுமே பந்துவீச வேண்டும் என்பதால் வருண் சக்ரவர்த்தியின் உடற்தகுதி ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆல்ரவுண்டர் இடத்துக்கான போட்டியில் ஜடேஜா மற்றும் பாண்டியா உள்ளனர். ஜடேஜா சமீப காலமாக நன்றாக பேட்டிங் செய்து வருவதால் அவர் விளையாடும் லெவனில் இருக்கும் வாய்ப்பு அதிகம்.இதனால் பாண்டியாவை ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் ஆட வைக்க வேண்டிய நிலை கோலிக்கு உருவாகி உள்ளது.ஒரு நல்ல மேட்ச் வின்னராக  பாண்டியா செயல்படுவார் என்னும் பார்வையில் அவர் அணியில் சேர்க்கப்படலாம்.

பாண்டியா  அறுவை சிகிச்சைக்கு பின் இன்னும் பந்துவீச முழுமையாக தயாராகவில்லை. தற்போது ஐ.பி.எல். தொடர் நடைபெற்று வருவதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிசியோவின் கீழ்  அவர் பயிற்சியில் உள்ளார். விரைவில் இந்திய அணியின் பிசியோவுடன் இணைந்து பணியாற்றுவார். அப்போது தான் அவருடைய உடற்தகுதியை கண்காணித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தற்போது  முன்னாள் கேப்டன் டோனி, 20 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதால் அவருடைய பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படும். அவர் கேப்டன் கோலி, ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் கலந்து ஆலோசித்து வருண் சக்ரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் குறித்த தனது முடிவை அறிவிப்பார். எனவே, அனைவரது பார்வையும் டோனியின் மீது திரும்பியுள்ளது.

Next Story