ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.36 ஆயிரம் கோடி கிடைக்க வாய்ப்பு


ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமம் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.36 ஆயிரம் கோடி கிடைக்க வாய்ப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 10:29 PM GMT (Updated: 21 Oct 2021 10:29 PM GMT)

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறது. 2018-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டு வரையிலான ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ.16,347 கோடிக்கு பெற்றது.

இதற்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு டி.வி. மற்றும் டிஜிட்டல் உரிமத்தை (2023-ம் ஆண்டில் இருந்து 2027 வரை) வாங்குவதற்கு முன்னணி நிறுவனங்கள் இப்போதே ஆர்வம் காட்டுகின்றன. மேலும் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயருவதால் ஆட்டங்களும் 60-ல் இருந்து 74 ஆக அதிகரிக்கிறது. இதனால் இந்த முறை ஐ.பி.எல். ஒளிபரப்புக்கான டி.வி. ஒளிபரப்பு உரிமத் தொகை இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரூ.30 ஆயிரம் கோடி முதல் ரூ.36 ஆயிரம் கோடி வரை ஒளிபரப்பு உரிமத் தொகையாக கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று தெரிவித்தார்.

இதற்கிடையே, அடுத்த ஐ.பி.எல்.-ல் இடம் பெறும் இரண்டு புதிய அணிக்கான உரிமம் யாருக்கு என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த வாரம் அறிவிக்க உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள் ஐ.பி.எல். அணியில் முதலீடு செய்வதற்காக அதற்கான டெண்டர் விண்ணப்பத்தை வாங்கியுள்ளனர். புதிய இரு ஐ.பி.எல். அணிகளும் ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை ஏலம் போக வாய்ப்புள்ளது.


Next Story