ஐ.பி.எல். 2 புதிய அணிகள் இன்று அறிவிப்பு


ஐ.பி.எல். 2 புதிய அணிகள் இன்று அறிவிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2021 10:03 PM GMT (Updated: 24 Oct 2021 10:03 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் தற்போது 8 அணிகள் விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15-வது ஐ.பி.எல். போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்படுகின்றன.

அடுத்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடும். ஐ.பி.எல். புதிய அணிகளுக்கான டெண்டர் நடைமுறையை கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது. டெண்டர் விண்ணப்ப கட்டணமாக ரூ.10 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டது. மொத்தம் 22 நிறுவனங்கள் டெண்டர் விண்ணப்பங்களை வாங்கி இருக்கின்றன. அணியின் அடிப்படை விலையாக ரூ.2 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

அதானி குழுமம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், இங்கிலாந்தை சேர்ந்த கால்பந்து கிளப்பான மான்செடர் யுனைடெட், கோடாக் குரூப், அரோபின்டோ மருந்து நிறுவனம், ஜிண்டால் ஸ்டீல் ஆகியவை புதிய அணியை வாங்குவதில் ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. புதிய அணியை சில நிறுவனங்களுடன் இணைந்து வாங்க முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்தி நடிகர், நடிகைகளும் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாக கொண்டு புதிய அணிகள் அமைய வாய்ப்பு இருக்கிறது. இந்தூர், கவுகாத்தி, கட்டாக், தர்மசாலா, புனே ஆகிய நகரங்களும் இந்த பட்டியலில் இருக்கிறது.

புதிய அணிகளுக்கான டெண்டர் பரிசீலனையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று தொடங்கி விட்டது. இதனால் புதிய அணிகள் பற்றிய விவரம் இன்று அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. புதிய அணிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.7 ஆயிரம் கோடி முதல் ரூ.10 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story