பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி; வங்காளதேசம் போராடி தோல்வி!
வங்காளதேசத்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி திரில் வெற்றி பெற்றது.
டாக்கா,
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய முதல் இரண்டு டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. மூன்றாவது டி20 போட்டி இன்று டாக்காவில் நடைபெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்று வங்காளதேசம் முதலில் பேட்டிங் செய்தது. வங்காளதேச அணியின் தொடக்க வீரர்களாக நைம் மற்றும் ஷாண்டோ களமிறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நைம் 47 ரன்கள் எடுத்தார். அவரை தவிர பிற வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் வங்காளதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது வாசிம் ஜூனியர் மற்றும் உஸ்மான் காதிர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 127 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹைதர் அலி 45 ரன்கள் எடுத்தார். முகமது ரிஸ்வான் 40 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேச அணியின் கேப்டன் மகமதுல்லா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக கைப்பற்றி உள்ளது.
Related Tags :
Next Story