வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
கல்லே,
இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை 386 ரன்கள் குவித்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 3-வது நாள் முடிவில் 9 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4-வது நாளான நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணி எஞ்சிய ஒரு விக்கெட்டையும் இழந்து 230 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது.
அடுத்து 156 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 191 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கேப்டன் கருணாரத்னே (83 ரன்), மேத்யூஸ் (69 ரன்) அரைசதம் அடித்தனர். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 348 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கடின இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி சுழல் தாக்குதலில் சிக்கி 18 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை தாரைவார்த்து தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து தள்ளாடுகிறது. கிருமா பொன்னெர் (18 ரன்), ஜோஷூவா டா சில்வா (15 ரன்) களத்தில் உள்ளனர்.
பின்னர் இன்று நடைபெற்ற கடைசி நாளில் அந்த அணியில் கிருமா பொன்னெர் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் போராடிய நிலையில், விக்கெட் கீப்பர் ஜோசுவா ட சில்வா 54 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் வெஸ்ட் அணி இண்டீஸ் 160 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் இலங்கை அணி 187 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியின் கேப்டன் கரணரத்னே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Related Tags :
Next Story