கான்பூர் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் 14 ரன்கள் சேர்ப்பு


கான்பூர் டெஸ்ட்: மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் 14 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2021 1:05 PM GMT (Updated: 27 Nov 2021 2:55 PM GMT)

மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி 2-ம் இன்னிங்ஸ்சில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது.

கான்பூர்,

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 111.1 ஓவர்களில் 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய  நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்  57 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியில் வில் யங் 75 ரன்களுடனும், டாம் லாதம் 50 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று தொடங்கிய மூன்றாம் நாளில் நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. அந்த அணியின்  தொடக்க ஆட்டக்காரர்கள் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் நியூசிலாந்து அணி பெரிய ஸ்கோரை அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் இந்திய சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டினை இழந்து வெளியேறினர். இறுதியில் நியூசிலாந்து அணி 142.3 ஓவர்களில் 296 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதனையடுத்து தனது இரண்டாவது இன்னிங்ஸ்சில் இந்திய அணி களமிறங்கியது. சுப்மன் கில் ஒரு ரன்னில் வெளியேறினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை விட 63 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நாளை நான்காம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


Next Story