ஐ.பி.எல்: வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு


ஐ.பி.எல்: வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு
x
தினத்தந்தி 30 Nov 2021 12:24 AM GMT (Updated: 30 Nov 2021 12:24 AM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வீரர்களை தக்கவைப்பதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடக்கும் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு அகமதாபாத், லக்னோ ஆகிய அணிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதையொட்டி ஜனவரி மாதம் வீரர்களின் மெகா ஏலம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு முன்பாக 8 அணிகளும் தலா 4 வீரர்களை தக்க வைக்க ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு அனுமதி அளித்துள்ளது. தங்கள் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த 4 வீரர்களில் அதிகபட்சம் 3 பேர் இந்தியர்களாக இருக்கலாம். இதே போல் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை 2-ஐ தாண்டக்கூடாது. 

ஒரு அணி 4 வீரர்களை தக்கவைக்கும் போது அவர்களின் ஊதியமாக முறையே ரூ. 16 கோடி, ரூ.12 கோடி, ரூ.8 கோடி, ரூ.6 கோடி வீதம் என்று மொத்தம் ரூ.42 கோடியை ஒதுக்க வேண்டும். மீதமுள்ள ரூ.48 கோடியை கொண்டு தான் மற்ற வீரர்களை ஏலத்தில் வாங்க முடியும். 

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரிஷாப் பண்ட், பிரித்வி ஷா, அக்‌ஷர் பட்டேல், அன்ரிச் நோர்டியா ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, பொல்லார்ட, இஷான் கிஷன் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகியோர் நீடிப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகியோர் தொடர்வது உறுதியாகி விட்டது.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் தன்னை விடுவிக்கும்படி வலியுறுத்துவதால் அவர் ஏலத்திற்கு வருவார் என்று தெரிகிறது. அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், முகமது ஷமி, மயங்க் அகர்வால், நிகோலஸ் பூரன் ஆகியோரில் ஒரு சிலரை வைத்துக் கொள்ள பஞ்சாப் அணி ஆர்வம் காட்டுகிறது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்ரவர்த்தி, ஆந்த்ரே ரஸ்செல், வெங்கடேஷ் அய்யர், சுனில் நரின், ஆகியோருக்கு அதிர்ஷ்டம் அடிக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சனை தக்க வைக்க முடிவு செய்துள்ளது. இதே போல் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை வைத்துக் கொள்ளவும் அந்த அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலி, கிளைன் மேக்ஸ்வெல் நீடிப்பது உறுதி.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியில் கேன் வில்லியம்சன், ரஷித்கான் ஆகியோர் மட்டும் இருப்பார்கள் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

8 அணிகளும் விடுவிக்கும் வீரர்களில் இருந்து புதிய அணிகளான அகமதாபாத், லக்னோ அணிகள் தலா 3 பேரை ஏலத்திற்கு முன்பாக தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story