விரைவில் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார் வி வி எஸ் லக்ஷ்மண் - பிசிசிஐ அறிவிப்பு
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக வி வி எஸ் லக்ஷ்மண் டிசம்பர் 13ம் தேதியன்று பொறுப்பேற்க உள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
மும்பை,
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக வி வி எஸ் லக்ஷ்மண் டிசம்பர் 13ம் தேதியன்று பொறுப்பேற்க உள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியுடன் அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணிக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று உள்ளார். இதனை தொடர்ந்து தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் வி வி எஸ் லக்ஷ்மண் நியமிக்கப்பட உள்ளார்.
பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் வரும் 13ம் தேதி அவர் பொறுப்பேற்க உள்ளார்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட டிராய் கூலேய் தேசிய கிரிக்கெட் அகாடமியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளார்.
பிசிசிஐ அறிவித்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியாளராக இருந்து வரும் ரிஷிகேஷ் கநிட்கர் அல்லது சிடான்ஷு கோடக் ஆகிய இருவரில் ஒருவர் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலககோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்படுவார்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் 20 வீரர்கள் இடம்பெறுவார்கள். அதில் வலைப்பயிற்சி வீரர்களும் அடங்கும்.
தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 2ம் தேதி நடைபெறும் வருடாந்திர நெல்சன் மண்டேலா விழாவில் பங்கேற்பதற்காக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய வகை கொரோனா வைரசான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அவர்கள் அந்த விழாவில் கந்து கொள்வார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story