புதுப்பொலிவு பெற இருக்கும் சேப்பாக்கம் ஸ்டேடியம்.!


புதுப்பொலிவு பெற இருக்கும் சேப்பாக்கம் ஸ்டேடியம்.!
x
தினத்தந்தி 16 Dec 2021 11:31 PM GMT (Updated: 16 Dec 2021 11:31 PM GMT)

அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக கட்டுமான பணிகள் நிறைவு பெறும்.

சென்னை, 

பழம்பெருமை வாய்ந்த கிரிக்கெட் மைதானங்களில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியமும் ஒன்றாகும். இங்கு 1934-ம் ஆண்டு முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அரங்கேறி வருகிறது. 

இந்திய அணியின் முதல் டெஸ்ட் வெற்றி உள்பட பல்வேறு சாதனைகள் இந்த மைதானத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளன. கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்த ஸ்டேடியத்தின் பெரும்பாலான பகுதி இடித்து புதுப்பிக்கப்பட்டது. அப்போது ஐ, ஜே, கே ஆகிய கேலரிகள் விதிமுறையை மீறி கட்டப்பட்டு இருப்பதாக சீல் வைக்கப்பட்டு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த பிரச்சினைக்கு கடந்த ஆண்டு தீர்வு காணப்பட்டது.

இந்த நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் மேலும் புதுப்பொலிவு பெறுகிறது. அதாவது பெவிலியன் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் அமைந்து இருந்த பழைய கட்டிடங்களை இடித்து அதனை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இடத்தில் சுமார் ரூ.80 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய வீரர்கள் தங்கும் அறை, கேலரிகள் உள்ளிட்டவை கட்டப்பட இருக்கின்றன. 

4 மாதங்களுக்குள் இந்த கட்டுமான பணியை முடிக்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னதாக கட்டுமான பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story