இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்


இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 14 Jan 2022 1:08 AM GMT (Updated: 14 Jan 2022 1:08 AM GMT)

இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று தொடங்குகிறது.

கயானா,

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வெஸ்ட் இண்டீசில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந்தேதி வரை நடக்கிறது. அங்குள்ள 4 மைதானங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியனான வங்காளதேசம், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டா, ‘சி’ பிரிவில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ‘டி’ பிரிவில் ஆஸ்திரேலியா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும். கொரோனா அச்சுறுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாடு காரணமாக நியூசிலாந்து அணி பின்வாங்கியதால் ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது.

முதல் நாளான இன்று நடக்கும் ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 15-ந்தேதி எதிர்கொள்கிறது. எல்லா ஆட்டங்களும் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

1988-ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டியில் இந்தியா அதிகபட்சமாக 4 முறையும் (2000, 2008, 2012, 2018-ம் ஆண்டு), ஆஸ்திரேலியா 3 முறையும், பாகிஸ்தான் 2 தடவையும் மகுடம் சூடியுள்ளன. இதில் 2008-ம் ஆண்டு இந்தியா பட்டம் வென்ற போது கேப்டனாக விராட் கோலி செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இன்ஜமாம் உல்-ஹக், பிரையன் லாரா, சனத் ஜெயசூர்யா, கிறிஸ் கெய்ல், யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஸ்டீவன் சுமித், பாபர் அசாம், ரபடா போன்ற வீரர்கள் ஜூனியர் உலக கோப்பையில் விளையாடி தான் பின்னாளில் நட்சத்திர வீரர்களாக உருவெடுத்தனர்.

இந்திய அணி இந்த முறை டெல்லி பேட்ஸ்மேன் யாஷ் துல் தலைமையில் களம் இறங்குகிறது. தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் மனவ் பராக்கும் அணியில் அங்கம் வகிக்கிறார். சமீபத்தில் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பட்டம் வென்ற இந்திய அணி, பயிற்சி ஆட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளை துவம்சம் செய்ததால் கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடும்.

இந்திய அணி வருமாறு:-

யாஷ் துல் (கேப்டன்), எஸ்.கே.ரஷீத், ஹர்னூர்சிங், அங்க்ரிஸ் ரகுவன்ஷி, நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஷ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆரத்யா யாதவ், ராஜ் அங்கட் பாவா, மனவ் பராக், கவ்ஷல் தாம்பே, ஹேங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஆஸ்ட்வால், ரவிகுமார், கார்வ் சங்க்வான்.


Next Story