டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றது மறக்கமுடியாதது: ஷாஹீன் அப்ரிடி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 24 Jan 2022 5:05 PM GMT (Updated: 24 Jan 2022 5:05 PM GMT)

கே.எல்.ராகுலுக்கு பந்து வீசியபோது, அது சிறந்த பந்தாக இருக்கும் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை.

கராச்சி,

ஐசிசி-ன் கடந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற முதல் பாகிஸ்தான் பவுலர் ஷாஹீன் ஷா அப்ரிடி. இவர் டி20 உலகக்கோப்பையின் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 31 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இந்திய பேட்டிங் வரிசையில் முதல் மூன்று வீரர்களை (ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி)  நீக்கி, பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார்.

அந்த போட்டி குறித்து ஷாஹீன் அப்ரிடி செய்தியாளர் சந்திப்பின்போது கூறுகையில், "கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை வென்றது மறக்க முடியாத தருணம். அந்த போட்டியில் ரோகித் சர்மாவை விரைவில் அவுட் செய்வேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கே.எல். ராகுல் விக்கெட்டை வீழ்த்திய பந்து என்னை ஆச்சரியப்படுத்தியது. அந்த விக்கெட்டை நான் மிகவும் ரசித்தேன். கே.எல்.ராகுலுக்கு பந்து வீசியபோது, அது சிறந்த பந்தாக இருக்கும் என்று நான் கூட எதிர்பார்க்கவில்லை. பின்னர் கோலியின் விக்கெட்டையும் எடுத்தது எனக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. ஆனால் அதற்குள் அவர் அரை சதம் எடுத்துவிட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா அல்லது பாபர் அசாம் போன்ற தரமான பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளைப் பெற மேஜிக் பந்துகளை உருவாக்க வேண்டும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அரையிறுதியில் மேத்யூ வேட், என் ஓவரில் மூன்று சிக்சர் அடித்தபோது, நான் அழுதேன். நாங்கள் அரையிறுதியில் தோற்றபோது, ஒரு அணியாக எங்களுக்கு மனவேதனையாக இருந்தது." இவ்வாறு அவர் கூறினார்.


Next Story