ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி


ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 27 Jan 2022 11:15 PM GMT (Updated: 27 Jan 2022 11:15 PM GMT)

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஆன்டிகுவா, 

14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 43.4 ஓவர்களில் 209 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. நடப்பு தொடரில் தொடர்ந்து 4-வது அரைசதம் அடித்த டிவால்ட் பிரேவிஸ் 97 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரீஹன் அகமது 4 விக்கெட் கைப்பற்றினார். 

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது. அதிகபட்சமாக ஜேக்கப் பெத்தேல் 88 ரன்னும் (42 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), வில்லியம் லக்ஸ்டன் ஆட்டம் இழக்காமல் 47 ரன்னும் விளாசினர். இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Next Story