ஐபிஎல் மெகா ஏலம்: வெளிநாட்டு தொடக்க வீரர்களுக்கு அதிக போட்டி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 Jan 2022 7:26 AM GMT (Updated: 29 Jan 2022 7:26 AM GMT)

ஐபிஎல் மெகா ஏலத்தில் டேவிட் வார்னரை ஏலத்தில் எடுப்பதில் அதிக போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா,

ஐபிஎல் மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் பங்குபெற இருக்கும் 5 வெளிநாட்டு தொடக்க வீரர்களுக்கு அணிகளிடையே அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் யார் என்பதை தெளிவாக பார்க்கலாம்:

1.டேவிட் வார்னர்: ஐபிஎல்-லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிவரும் டேவிட் வார்னர் கடந்த சீசனில் சரிவர விளையாடவில்லை என அணிநிர்வாகம் கழட்டிவிட்டது. ஆனால் அவர் நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பையில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்ததுடன் தொடர்நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். தற்போது ஆஸ்திரேலியாவிற்காக சிறப்பாக விளையாடி வார்னரை ஐபிஎல் ஏலத்தில் எடுப்பதில் அணிகளிடையே  அதிக போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.ஜானி பேர்ஸ்டோ: கடந்த சில ஐபிஎல் சீசன்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முக்கிய நட்சத்திரங்களில் முதன்மையானவர் ஜானி பேர்ஸ்டோ.  ஐபிஎல்-லில் இவரின் ஸ்டிரைக் ரேட் 142.19 ஆகும். இது பெரும்பாலான தொடக்க ஆட்டக்காரர்களை விட மிகச் சிறந்ததாகும். எனவே இவரை அணியில் எடுப்பதில் அணி நிர்வாகங்கள் தீவிரம் காட்டலாம்.

3.ஜேசன் ராய்: இங்கிலாந்தை சேர்ந்த தொடக்க ஆட்டக்காரரான இவர் அதிரடியாக விளையாடக்கூடியவர் ஆவார். வலதுகை ஆட்டக்காரரான இவர் குறுகிய வடிவிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடக்கூடியவர். இவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க ஏலத்தின் போது அணிகளிடையே போட்டி கானப்படலாம்.

4. பாப் டு பிளஸ்சிஸ்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பாப் டு பிளஸ்சிசை தக்க வைக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. கடந்த சில சீசன்களாக சென்னையின் முன்னணி வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் அசாதாரணமான பங்களிப்பை சென்னைக்காக செய்துவந்த அவரை சென்னை அணி ஏலத்தில் எடுக்க முனைப்பு காட்டலாம். இவரின் திறமை மற்றும் அனுபவம் மற்ற அணிகளுக்கும் தேவை என்பதால், மற்ற அணிகளும் இவருக்கு போட்டி போடலாம்.

5.குயிண்டன் டி காக்: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர் உலக கிரிக்கெட்டில் சிறந்த தொடக்கக்காரராக வலம் வருகிறார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பேட்டிங் செய்யும் போது பலமுறை தனது திறமையை நிரூபித்துள்ளார். கடைசியாக நடந்த இந்தியாவிற்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார். தொடக்கவீரர் மற்றும் விக்கெட் கீப்பரான இவர் அதிக தொகைக்கு ஏலம் போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story