டோனி போல் அணி தலைவராக செயல்பட என்னால் முடியாது... டு பிளெசிஸ் பேட்டி!


Image Courtesy : Twitter @FafDuPlessis
x
Image Courtesy : Twitter @FafDuPlessis
தினத்தந்தி 13 March 2022 7:42 PM GMT (Updated: 13 March 2022 7:42 PM GMT)

பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டு பிளெசிஸ், டோனி போல் அணி தலைவராக தன்னால் செயல்பட முடியாது எனக் கூறியுள்ளார்.

பெங்களூரு,

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி ஏற்கெனவே விலகினார்.

இதையடுத்து பெங்களூரு அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவியது. இந்த நிலையில், பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக பாப் டு பிளெஸ்சியை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

டி-20 போட்டிகளில் கேப்டன் பதவியேற்பது டு பிளஸ்சிசுக்கு இது புதிதல்ல. அவர் இதற்கு முன்பு கொமிலா விக்டோரியன்ஸ், பார்ல் ராக்ஸ், செயின்ட் கிட்ஸ், நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் செயின்ட் லூசியா கிங்ஸ் ஆகிய டி-20 அணிகளுக்கு கேப்டனாக பதவி வகித்துள்ளார். தென் ஆப்பிரிக்க அணிக்காகவும் கேப்டன் பதவி வகித்தவர் என்பதால், அவருக்கு கேப்டன் பதவிக்கான அனுபவம் அதிகம் உண்டு.

இந்நிலையில், டு பிளெசிஸிடம் நடத்தப்பட்ட நேர்காணலில், கடந்த 10 ஆண்டுகளாக டோனி தலைமையில் பணியாற்றியது குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அதில்  2011 ம் ஆண்டு சென்னை அணிக்காக விளையாட தொடங்கும் போது அணி தலைவர் குறித்த எனது எண்ணங்கள் முற்றிலுமாக வேறுபட்டதாக இருந்தது, நான் பார்த்தது கற்றது எல்லாம் தென்-ஆப்பிரிக்க ஸ்டைல் கேப்டன்ஷிப் முறையே, ஆனால் டோனி தலைமையில் ஆன கேப்டன்ஷிப் முறை எனக்கு முற்றிலும் வேறாக இருந்தது.

“சென்னை அணி எனக்கு கற்பித்தது எல்லாம் கேப்டன்சி முறைகளில் பல்வேறு பாணிகள் உள்ளது என்பதே. இவற்றில் முக்கியமானது என்னவென்றால் கேப்டன்சி என்பது தனித்துவமான சொந்த பாணியில் இருக்க வேண்டும் அதுவே போட்டிகளில் அழுத்தம் ஏற்படும் போது நம்மிடம் இருந்து வெளிப்படும்.

அதனால் என்னால் எப்போதும் விராட் கோலியாகவோ, எம்எஸ் டோனியாகவோ இருக்க முடியாது, இத்தனை ஆண்டுகால கிரிக்கெட்டில் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் எனது தலைமைத்துவ பாணியை வளர்க்க உதவி உள்ளது” என தெரிவித்துள்ளார். 

Next Story